கொடி பறக்குதா.. விண்வெளியில் இஸ்ரோ மேஜிக்! சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அங்கீகாரம்!
சென்னை: விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்து, அதனை வெற்றிகரமாக பிரித்து காட்டியிருக்கிறது இஸ்ரோ. இதனை Docking-Undocking என்று கூறுவார்கள். ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்த சாதனையை செய்த 4வது நாடு இந்தியா என்கிற பெருமையை இஸ்ரோ இதன் மூலம் பெற்று கொடுத்திருக்கிறது.
Docking-Undocking தொழில்நுட்பத்தை இந்தியாவால் கையாள முடியும் என்று தெரிய வந்திருப்பதால், இந்திய விண்வெளித்துறைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

SPADEX திட்டம் என்று பெயரிட்டு இதற்கான பணிகளை கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. ஒரு வழியாக கடந்த 2024 நவம்பர் மாதம் தலா 200 கி.கி எடை கொண்ட SDX-1 மற்றும் SDX-2 என்கிற 2 செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டன. இவை டிசம்பர் 30ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. SDX-1, SDX-2 இரண்டும் சுமார் 400 கி.மீ உயரத்தில், 20 கி.மீ தொலைவு இடைவெளியில் பூமியை சுற்றி வர தொடங்கின.
இவற்றை ஒன்றாக இணைப்பது டாக்கிங் (Docking) எனப்படும். இந்த செயல்முறை மிகவும் கடினமானது. பூமியிலிருந்து நம்மால் எதையும் கன்ட்ரோல் செய்ய முடியாது. இங்கிருந்து நாம் அனுப்பும் சிக்னல்கள் சில நொடிகள் கழித்துதான் அங்கு ரிசிவ் ஆகும். டாக்கிங் நேரத்தில் 1 நொடி தாமதமானலும் மொத்தமும் சொதப்பிவிடும். எனவே, தானியங்கியாக டாக்கிங் மேற்கொள்ளும் வகையில் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் கடந்த ஜன.16ம் தேதி SDX-1, SDX-2 இரண்டும் வெற்றிகரமாக டாக்கிங் செய்தன. அதாவது 2 செயற்கைக்கோள்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தன.
இதனையடுத்து, அன்டாக்கிங் (Undocking) செய்யப்பட வேண்டும். அதாவது ஒன்று சேர்ந்த செயற்கைக்கோள்கள் மீண்டும் பிரிய வேண்டும். இன்று இந்த சாதனை நடந்திருக்கிறது.
சரி ஏன் Docking-Undocking முக்கியம் என்று நமக்கு கேள்வி எழலாம்.. இந்தியாவிடம் எதிர்காலத்தில் நிறைய விண்வெளி திட்டங்கள் இருக்கின்றன. குறிப்பாக தனி விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கும் திட்டம். இதற்கு Bharatiya Antriksha Station என பெயரிடப்பட்டிருக்கிறது. இது குறைந்தபட்சம் 52,000 கி.கி எடை இருக்கும். இவ்வளவு எடையை விண்வெளிக்கு ஒரே சுற்றில் கொண்டு செல்ல முடியாது. இஸ்ரோவிடம் இருக்கும் ராக்கெட்டில் மிகப்பெரியது GSLV Mk-III தான். இதில் அதிகபட்சமாக 10,000 கி.கி வரைதான் பொருட்களை அனுப்ப முடியும்.
அப்படியெனில் விண்வெளி மையத்தை எப்படி அமைப்பது? அதற்காகத்தான் Docking-Undocking தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது விண்வெளி மையத்திற்கு தேவையான பொருட்களை தனித்தனியாக அனுப்பி வைத்து, பின்னர் அவற்றை மீண்டும் ஒன்று சேர்த்து விண்வெளி மையத்தை உருவாக்க முடியும்.
தவிர, நிலவிலிருந்து மண் துகள்களை எடுத்து வரவும் இந்தியா திட்டமிட்டிருக்கிறது. இதற்காக lunar regolith எனும் திட்டத்தை தயார்படுத்தி வருகிறது. இந்த திட்டம் முழுமையடைய வேண்டும் என்றால், நிச்சயம் நமக்கு Docking-Undocking தெரிந்திருக்க வேண்டும். மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கும் இது அவசியம்.
இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா என 3 நாடுகள்தான் Docking-Undocking தொழில்நுட்பத்தை கற்று வைத்திருந்தன. இன்று இந்த லிஸ்ட்டில் 4வது நாடாக நாமும் இணைந்திருக்கிறோம்.












Click it and Unblock the Notifications