இது அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே உள்ள பிரச்சனை.. நாங்க எதிர்க்கட்சி.. நைசாக எஸ்கேப் ஆன எடப்பாடி!
சென்னை: ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது பற்றிய கேள்விக்கு, அது ஆளுநருக்கும் அரசுக்கும் உள்ள பிரச்சனை எனக் கூறி நழுவியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்து வழங்கிய உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே ஆளுநர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

ஆளுநர் உரையை ஆளுநர் ரவி புறக்கணித்து, அவையில் இருந்து வெளியேறிய நிலையில் சட்டசபை அலுவல் முடிந்ததும் தேசிய கீதம் பாடப்பட்டது. கடந்த மாதம் கேரளாவில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியபோது, ஆளுநர் உரையை வாசிக்க மறுத்து, கடைசி பத்தியை மட்டும் வாசித்துவிட்டுக் கிளம்பினார். அதேபோன்ற ஒரு சம்பவம் தான் தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது.
ஆளுநர் உரையை ஆளுநர் புறக்கணித்து வெளியேறியதைத் தொடர்ந்து, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரையில், எந்தவிதமான குறிப்பும் இல்லை. எந்தவிதமான புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிக்காத இந்த அரசு, பசப்பு வார்த்தை ஜாலங்களை வாரி இறைத்திருக்கின்றது. திமுக அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரை, உப்பி சப்பில்லாத ஊசிப் போன உணவுப் பண்டம் என்றார்.
ஆளுநர் ரவி, 2 நிமிடங்களிலேயே உரையை முடித்துக் கொண்டது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "ஆளுநர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியதாக சபாநாயகர் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்துள்ளார். அந்தக் கோரிக்கையை சபாநாயகர் நிறைவேற்றாத காரணத்தால் உரையை படிக்கவில்லை என ஆளுநர் கூறியிருக்கிறார்.
ஆளுநர், தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்தது, அரசுக்கும், ஆளுநருக்கும், சபாநாயகருக்கும் இடையே உள்ள பிரச்சனை. அரசுக்கும் ஆளுநருக்கும் உள்ள பிரச்சனை தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் எதிர்க்கட்சி. ஆளுநருக்கு என்ன பிரச்சனை, அரசுக்கு என்ன பிரச்சனை, சபாநாயகருக்கு என்ன பிரச்சனை என்பது பற்றி அவர்களிடத்தில் பேசினால் தான் விடிவு கிடைக்கும்" என திரும்பத் திரும்பக் கூறி நழுவினார்.
மேலும், சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை மரபுகளை கடைபிடிப்பதில்லை. இனியாவது அவற்றை சபாநாயகர் கடைபிடிப்பார் என்று நம்புகிறேன். அவைக்கு என்று ஒரு மரபு இருக்கிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபுகளை சபாநாயகர் மீறி வருகிறார். சட்டப்பேரவைத் தலைவரே ஒருதலைபட்சமாக நடக்கின்றபோது, என்ன செய்வது என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications