விஜய் போடும் மாஸ்டர் பிளான்! தீவிர அரசியல் என்ட்ரி.. திருச்சிதான் ஸ்பாட்! வெளியாகப்போகும் அறிவிப்பு
சென்னை: நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கியிருந்தார். இதனையடுத்து மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழாவில் அவர் பேசியிருந்தது கவனம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து மக்களை சந்திக்கும் விதமாக மாநாடுகளை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வந்த விஜய், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வந்திருந்தார். அவர் அரசியலில் இறங்கப்போவதாகவும், எனவேதான் இதுபோன்ற கதைகளில் நடிக்கிறார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் அவர் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியை தொடங்கினார். இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.

யாருடைய வாக்குளை விஜய் குறிவைக்கப்போகிறார் என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், கட்சி தொடங்கி அவர் பொதுவெளியில் எதுவும் உரையாற்றவில்லை. இப்படி இருக்கையில்தான் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவை விஜய் நடத்தியிருந்தார். இதில் அவர் பேசிய விஷயங்கள் பெரும் கவனம் பெற்றிருந்தன.
“தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், நல்ல தலைவர்கள்தான் இல்லை. இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றனர். அரசியலும் ஏன் ஒரு துறையாக வரக்கூடாது? அப்படி வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சமூக ஊடகங்கள் நல்லவர்களைக் கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காண்பிக்கின்றனர். அதையெல்லாம் படியுங்கள், ஆனால் எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் நாட்டில் என்ன பிரச்னைகள் உள்ளன, சமூகத் தீமைகள் குறித்து உங்களுக்குத் தெரியும்.
சில கட்சிகளின் பொய்யான பிரசாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விசாலமான பார்வை கிடைக்கும். அதுதான் சிறந்த அரசியல். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்துவது அரசின் கடமை, இளைஞர்களை காப்பாற்றுவது அரசின் கடமை, இப்போது ஆளும் அரசு அதைத் தவற விட்டுவிட்டார்கள் என்பதை நான் பேச வரவில்லை, அதற்கான மேடையும் இதுவல்ல. சில சமயங்களில் அரசாங்கத்தைவிட நம் பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அதேபோல போதைப் பழக்கத்தை தவிர்க்கும் பொருட்டு, 'Say No to Temporary pleasure, Say No to drugs' என மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் சொன்னார் விஜய். ஏற்கெனவே அதிமுக Say No to drugs என திமுகவுக்கு எதிராக தொடர்ந்து சோஷியல் மீடியாவில் விமர்சனங்களை அடுக்கி வருகிறது. இப்படி இருக்கையில், விஜய்யும் இதேபோல பேசியிருந்தது திமுகவுக்கு எதிராக இருந்ததாக பலரும் கூறியிருந்தனர்.
ஆனால், சில நாட்கள் கழித்து அடுத்து நடந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில், “நீட், மாநில உரிமை, மாநிலப்பட்டியிலில் கல்வி” என திமுக பாணியில் பேசியிருந்தார்.
இப்படி இருக்கையில் விரைவில் மக்களை அவர் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் மாநாடுகள் மூலமாகவும், பின்னர் நடைப்பயணமாகவும் மக்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 4 மண்டலங்களிலும் மாநாடுகளை விஜய் நடத்துகிறார். பின்னர் மாநில மாநாட்டை நடத்துகிறார். இதனையடுத்து 100 சட்டமன்ற தொகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
மாநாட்டை பொருத்தவரையில் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்துகிறார் என்றும், இது செப்டம்பர் அல்லது நவம்பரில் நடக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை விரைவில் அறிவிப்பாகவும் வெளியாக உள்ளாதாக சொல்லப்படுகிறது.
கடந்த லோகச்பா தேர்தலுக்கு முன்பே விஜய் கட்சியை தொடங்கியிருந்தாலும், 2026 சட்டப் பேரவை தேர்தல்தான் இலக்கு என அறிவித்திருந்தார். எனவே சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக விஜய் மாநாடுகளை நடத்துகிறாரா? என்கிற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications