இம்ரான் கான் நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது; பாகிஸ்தானில் நடந்த நிகழ்வுக்கு முஸ்லீம் லீக் கண்டனம்!
சென்னை: பாகிஸ்தானில் நடந்த கொலை நிகழ்வு ஒன்றுக்காக கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொகீதின், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் நடவடிக்கை ஆறுதல் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே அடுத்த நாட்டில் நடந்த ஒரு கொலை நிகழ்வுக்காக இவ்வளவு தூரம் கண்டனம் தெரிவிக்கும் காதர்மொதீன், அவ்வப்போது தமிழகப் பிரச்சனைகள் தொடர்பாகவும் வாய் திறக்க வேண்டும் சமூகவலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.
காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;

பாகிஸ்தான்
பாகிஸ்தானின் சியால்கோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ள கோர கொலை சம்பவம் மானிட நெஞ்சங்களை உலுக்குவதாக அமைந்திருக்கிறது. ஸ்ரீலங்காவைச் சேர்ந்த பிரியந்தா தியாவதனா என்பவர் சியால்கோட்டில் தொழிற்சாலை மேலாளராகப் பணிபுரிந்துள்ளார். அவர்மீது வீண்பழி சுமத்தி, ஒரு கொலை வெறிக்கும்பல் கோரமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளது.

அட்டூழியம்
இந்த அட்டூழியம் கடும் கண்டனத்துக்கு உரியது. இந்தக் கொலை பாதகர்கள் எவ்வித இரக்கமுமின்றி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இத்தகைய படுபாதகர்கள் மனித உருவில் வாழும் மிருகங்கள் மட்டுமல்ல; நாகரிக சமுதாயத்தில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

இம்ரான் கான்
இந்தக் கோர சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கையை எடுத்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் செயல்பாடு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இத்தகைய கொலை வெறிக் கும்பலின் நடவடிக்கைகள் வன்மையான கண்டனத்திற்குரியது. இது போன்ற அட்டூழியங்கள் வருங்காலத்தில் நடைபெறா வண்ணம் அந்நாடு முன்னெச்சரிக்கையில் ஈடுபட வேண்டும்.

கண்டனம்
இந்தக் கோர சம்பவத்தை இந்திய முஸ்லிம்கள் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடுமையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications