என்னை அத்தை வெறுத்தாரா?.. எங்களை அவருடன் நெருங்கவிடாததே சசிகலா கோஷ்டிதான் .. ஜெ தீபா பரபரப்பு
சென்னை: என்னை என் அத்தை வெறுத்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா சொன்னதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு என ஜெ தீபா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியிருந்ததாவது: அக்காவின் அண்ணன் மகள் ஜெ தீபா காழ்ப்புணர்வோடு என் மீது பொய்யான விவரங்களை இந்த ஆணையத்தில் கூறியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் எவ்விதமான அடிப்படை ஆதாரமும் இன்றி வெறும் ஐயத்தின் பால் சுமத்தப்பட்டுள்ளது.

உயிரோடு இருந்த காலம்
அக்கா அவர்கள் உயிரோடு இருந்த கால கட்டம் வரையில் ஜெ தீபா மீது அக்கா நல்ல மதிப்பு கொண்டிருக்கவில்லை. அதற்கு காரணம் ஜெ தீபா அவரது தாயாரை போன்றே நடந்து கொள்கிறார் என்று அக்கா பல முறை என்னிடம் சொல்லியதுண்டு. ஜெ தீபாவின் தாயார் விஜயலட்சுமி பாரத பிரதமராக இருந்த நரசிம்ம ராவை சந்தித்து அக்காவின் நன்மதிப்பிற்கு கேடு விளைவிக்கும் வகையில் உயிருக்கும் ஆபத்து எனவும் மற்றும் பாதுகாப்பு தேவை எனவும் பொய் புகார் கொடுத்தார். இவ்வாறு சசிகலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டை மறுக்கும் தீபா
சசிகலாவின் இந்த குற்றச்சாட்டை ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ தீபா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னை என் அத்தை வெறுத்தார் என சசிகலா கூறியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. 1993 ஆம் ஆண்டு எனக்கு 19 அல்லது 20 வயது இருக்கும் என நினைக்கிறேன். அப்போது நான் எனது அத்தை வீட்டிற்கு சென்றேன். அங்கு நான் என் உடலில் தெம்பில்லாததால் மயங்கினேன். அப்போது பதறிய எனது அத்தை என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டார்.

கட்டி அணைத்து ஆறுதல்
உடனடியாக மருத்துவரை அழைத்தார். எனது பெற்றோரையும் அழைத்தார். அப்போது மருத்துவரும் எனது பெற்றோரும், என் அத்தையிடம், தீபா சரியாக சாப்பிடாததால் அவர் மயக்கமடைந்தார் என்றனர். இதனால் நான் அழுதேன். அப்போது என் அத்தை என்னை கட்டி அணைத்து எல்லாம் ஒரு நாள் சரியாகும். கவலைப்படாதே என ஆறுதல் கூறினார். மேலும் எதற்கும் பயப்படக் கூடாது என்றார்.

மருமகள்
இப்படித்தான் மருமகளான என்னை என் அத்தை கவனித்தார். அது போல் நான் எப்போது வீட்டிற்கு சென்றாலும் முதலில் ஹார்லிக்ஸ் கொண்டு வருமாறு கூறி அதை குடிக்க சொல்வார். இதன் பிறகு எனது அத்தையை 1997 ஆம் ஆண்டு சிறையில் சந்தித்தேன். என்னிடம் நன்றாக பேசினார். என் கைகளை பிடித்து என்னை உட்கார வைத்தார். என்னை உட்கார வைத்த இடத்தில் மூத்த நிர்வாகிகளான பிஎச் பாண்டியன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அங்கே இருந்தனர். நிறைய பேர் அங்கிருந்த போதிலும் எனக்கு சிறிய வயது என்பதால் அவர்கள் இருவரையும் மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது.

டிடிவி தினகரன்
1997, 1998 களில் சசிகலாவும் டிடிவி தினகரனும் சிறைக்குச் சென்றனர். அப்போது எனது அத்தையை சில முறை பார்த்துள்ளேன். எனது பிறந்தநாளுக்காக காரில் நிறைய சாக்லேட்டுகளையும் கேக்கையும் அத்தை அனுப்பி வைத்தார். இப்படித்தான் எங்களுக்குள்ளான உறவு முறை இருந்தது. ஆனால் சசிகலா என்னை எனது அத்தை வெறுத்தார் என கூறுவதெல்லாம் கட்டுக்கதைகள்.

அண்ட விடாமல் செய்ததே சசிகலாதான்
என் மீது அவதூறு கூறுகிறார். என் அத்தைக்கு சொந்தமாக குடும்பமே இல்லை என்பதை மக்களை நம்ப வைக்க இப்படி செய்கிறார். தனது அண்ணன் குழந்தைகளை ஒரு அத்தை எப்படி வெறுப்பார்? இதை மனதில் வைத்துதான் வளர்ப்பு மகன் விவகாரத்தை சசிகலா மனதில் வைத்திருந்தார். இப்படித்தான் என் அத்தையிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவர் மனதில் வெறுப்பை உண்டாக்கி எங்களை அவருடன் நெருங்க விடாமல் செய்தார். இவ்வாறு ஜெ தீபா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications