அரசு அவமதித்து விட்டது.. டிச.4 முதல் ஸ்ட்ரைக்.. ஜாக்டோ-ஜியோ அதிரடி அறிவிப்பு
சென்னை: டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் நேற்று அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று அந்த அமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று மதியம் நடைபெற்றது.
பின்னர் கூட்டாக ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் கூறியதாவது:
ஏழு அம்ச கோரிக்கைகளை மிக தெளிவாக எடுத்து சொன்னோம் ஆனால் கவனத்திற்கு எடுத்து சொல்வோம் என்று அவர்கள் அவமதிக்கும் வகையில் பதிலளித்தனர்.
டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும். டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த முதல்வரின் நினைவு நாள் அன்று ஜெ.வின் படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்துவோம். 7ஆம் தேதியிலிருந்து மறியல் போராட்டம் நடக்கும்.
அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை. முதல்வர் அழைத்து பேசினால் நாங்கள் பரீசிலிப்போம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 10 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் குதிப்பதால், அரசு இயந்திரம் ஸ்தம்பிக்கும் வாய்ப்புள்ளது.
முன்னதாக, ஸ்ட்ரைக் செய்தால் புயல் மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால் போராட்டத்தை கைவிடும்படி, முதல்வர் இன்று காலை கோரிக்கைவிடுத்தார்.