புயல் நிவாரணம் பாதிக்கும்.. ஸ்ட்ரைக் வேண்டாம்.. ஜாக்டோ-ஜியோவிற்கு முதல்வர் கோரிக்கை
சென்னை: டிசம்பர் 4ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் முடிவு செய்துள்ள நிலையில், வேலை நிறுத்தம் வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலுயுறுத்தி வருகிறார்கள்.
இதைவலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இம்முறை ஜாக்டோ-ஜியோவின் அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூட்டாக நடத்திய வேலை நிறுத்தம் அரசுக்கு கசப்பான அனுபவங்களை வழங்கியுள்ளது. எனவேதான், நேற்று ஜாக்டோ ஜியோ ஊழியர் சங்கத்தினருடன் நேற்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த ஒரு உறுதியையும் அமைச்சர்கள் வழங்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனிடையே ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் இன்று மதியம் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் அரசிடமிருந்து எந்த ஒரு சமிக்ஞையும் மதியம் வரை வராத காரணத்தால் டிசம்பர் 4ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் குதிப்பது என்று இன்று காலையே முடிவு செய்துவிட்டதாக ஜாக்டோ-ஜியோ ஊழியர் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சேர்ந்த அனைவரும் பங்கேற்பதால் நான்காம் தேதி முதல் அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும்ம் வாய்ப்பு உள்ளது. இதனிடையே புயலால் பல மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளதால், ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் தங்கள் போராட்ட முடிவை கைவிட வேண்டும். வேலை நிறுத்தம் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெறும் நிவாரணப்பணிகளை பாதிக்கும். ஜாக்டோ -ஜியோவின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்கும். இவ்வாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று மதியம் நடைபெற உள்ள ஜாக்டோ-ஜியோ உயர் மட்ட குழு முதல்வர் கோரிக்கையை பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.