“தனக்கு பிரச்சனை வந்தாலே கம்முனு இருக்காரு.. விஜய் செயலிழந்து விட்டாரா?” நடிகை கஸ்தூரி காட்டம்!
சென்னை: விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்பட ரிலீஸ், தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் தள்ளிப்போயுள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்துள்ள நிலையில், விஜய் நேரடியாக எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டவில்லை. இதனை பாஜக நிர்வாகியும், நடிகையுமான கஸ்தூரி விமர்சித்துள்ளார். விஜய் செயலிழந்துவிட்டாரா என கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியிருக்கும் 'ஜனநாயகன்' கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை வாரியத்திடம் இருந்து சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் உள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜனநாயகன்' படத்துக்கு U/A சான்று அளிக்க தணிக்கை வாரியத்திற்கு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதுவரை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் தணிக்கை வாரியம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. அதற்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து எந்தவிதமான எதிர்ப்புக் குரலும் வரவில்லை.
இந்நிலையில் தான் தன்னுடைய பிரச்சனைக்கே விஜய் குரல் கொடுக்காததை விமர்சித்து, விஜய் செயலிழந்துவிட்டாரா, முடக்குவாதம் வந்துவிட்டதா என பாஜக நிர்வாகி கஸ்தூரி காட்டமாக விமர்சித்துள்ளார். விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி, "ஜனநாயகன் படத்தை பொறுத்துவரை எனக்கு தெரிந்து படம் முழுமையாக மே மாதமே முடிந்துவிட்டது. ஆனால் அவர்கள் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தணிக்கை குழுவிற்கு ஏன் அனுப்பவில்லை என்பது புரியவில்லை.
விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்பதை தாண்டி, விஜய் தற்போது எதிர்பார்ப்புக்குரிய அரசியல் தலைவராகவே பார்க்கப்படுகிறார். திமுகவை அதிகமாக எதிர்க்கக்கூடியவராகவும், பாஜகவையும் எதிர்க்கக்கூடிய தலைவராகவே தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அப்படி இருக்கும்போது அவருடைய கடைசி படமான ஜனநாயகனுக்கு எங்கிருந்தாவது, எப்படியாவது எதிர்ப்பு வரலாம் என்பதை அவர்கள் முன்கூட்டியே யோசித்து செயல்பட்டிருக்க வேண்டும்.
தற்போது தணிக்கை வாரியத்தால் பிரச்சனை வந்துள்ளது, ஆனால் நான் இதற்கு முன்பே யாராவது கதை திருட்டு என்றோ, NOC வாங்கவில்லை என்றோ பிரச்னை செய்வார்கள் என்றோ எதிர்ப்பார்த்தேன். படம் முழுக்க ராணுவ அடையாளங்களையும், தேசிய அடையாளங்களையும் பதிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கான என்.ஓ.சி எதுவும் வாங்கவில்லை. அதையெல்லாம் அவர்கள் வாங்கியிருக்க வேண்டும் தானே? இதற்கு முன்னர் வந்த அமரன் திரைப்படம் அதையெல்லாம் பெற்றுத்தானே ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த பிரச்சனையில் அரசியலில் விஜய்க்கு அனுபவமின்மையும், பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இருக்கும் அனுபவமின்மையும் தான் வெளிப்பட்டுள்ளது. அவர்களுக்கு சென்சார் சார்ந்த எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் போனதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. பூவே உனக்காக படத்திலிருந்து மெர்சல் படம் வரை முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்த்த விஜய்யின் ரசிகை நான்.
காவலன் திரைப்படம் வெளிவந்தபோதும் இவருக்கு பிரச்சனை வந்தது. அப்போதெல்லாம் அவரை பார்க்கும்போது பாதிக்கப்பட்டவராகப் பார்த்தோம். ஆனால் இன்றைக்கு அவர் அனைத்திற்கும் கம்முனு அமைதியாகவே இருக்கிறார். தற்போது அவரை பாதிக்கப்பட்டவரா பார்ப்பதா இல்லை செயலிழந்து போனவராக பார்ப்பதா? ஏன் இப்படி இருக்கிறார் என்று புரியவில்லை, அவருடைய பிரச்சனைக்கே அவர் குரல் எழுப்பவில்லை என்றால், எங்களுடைய பிரச்சனைக்கு எப்படி அவர் குரல் எழுப்புவார்?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications