வருக.. வருக.. பாமகவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்த ஜெயக்குமார்!
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் மீனவர்கள் நலன், விவசாயிகள் நலன் என எல்லோருடைய நலனுக்கானதாக இருக்கும் என சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கட்சிகள் ரகசிய கூட்டணி பேரங்களை நடத்தி வருகின்றன.
யார் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக யூகங்கள் தினமும் செய்திகளாக இடம்பெறுகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் தமிழக அரசின் பட்ஜெட் மீனவர்கள் நலன், விவசாயிகள் நலன் என எல்லோருடைய நலனுக்கானதாக இருக்கும்.

ஒப்பானது
மக்களின் நாடித் துடிப்பை அறிந்த ஒரே கட்சி அதிமுகதான். அதிமுக என்ற இமயமலை கட்சிக்கும் அமமுக என்ற லெட்டர் பேட் கட்சிக்கும் இடையே வித்தியாசம் உண்டு. கடல் வற்றி மீன் சாப்பிடலாம் என நினைத்த கொக்கு, குடல் வற்றி செத்ததற்கு ஒப்பானதாகியுள்ளது தங்கதமிழ்ச் செல்வன் பேச்சு .

குறையவில்லை
ஆர் கே நகரில் டோக்கன் கொடுத்தவர்களை மக்கள் தேடுகிறார்கள். ஜெயலலிதா இருந்த போது அதிமுகவுக்கு இருந்த செல்வாக்கு எந்த வகையிலும் குறையவில்லை.

தொழிலாளர்கள்
விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் நலன் சார்ந்த வகையில் பட்ஜெட் இருக்கும். திமுகவை தவிர யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணி வைக்கலாம். பாமக வருக வருக.. திமுக மட்டுமே எங்களுடைய எதிரி.

அதிமுக
கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த உடன் கட்சி தலைமை கூட்டணி குறித்து அறிவிக்கும். இதுவரை அதிமுக தனித்து நின்று போட்டியிட்டுள்ளது. ஆனால் திமுகவோ இதுவரை அப்படி செய்ததே இல்லை என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications