தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமா அடிக்கிறாங்க.. அதிமுக ஜெயக்குமார் கடும் தாக்கு
சென்னை: தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும்தான் கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிகுமார், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அவகாசம்
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைக் காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால் மேலும் அவகாசம் கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தேர்தலை தள்ளி வைத்தல்
அப்போது ஜெயக்குமார் கூறுகையில் எங்கள் ஆட்சி பயந்து கொண்டு தேர்தலை தள்ளி வைப்பதாக திமுக அப்போது சொன்னது. இப்போது இவர்களும் பயத்தினால்தான் தேர்தலைத் தள்ளி போட முயல்கின்றனரா? காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடத்துவதற்கு பதிலாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். வாக்குப் பதிவு நடக்கும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த கோரிக்கை வைத்துள்ளோம்.

வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகள்
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை திமுக அளித்தது. நீட் விலக்கு, மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை, முதியோருக்கு ரூ 1500 ஆக உதவித் தொகை உயர்த்தப்படும், டீசல் விலை ரூ 4 குறைப்பு, கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து என வாக்குறுதி அளித்தனர்.

மொட்டை மட்டும்தான்
ஆனால் எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் அடித்துக் கொள்ளலாம். தமிழக மக்கள் முழுமையாக மொட்டை அடிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாக கிடைக்கக் கூடிய ஒன்று என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

மொட்டை அடிக்க கட்டணம் இல்லை
தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. பழனி முருகன் கோயிலில் இலவச டோக்கன் தந்து கட்டணமின்றி மொட்டை அடிப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தனியார் ரூ 100 வசூலிக்கும் வகையில் தேவஸ்தானம் சார்பில் கட்டணமின்றி இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications