காலில் விழுவதை ரசித்தாரா ஜெயலலிதா? ஜெ.ஜெ.வை பற்றி பேச ஆளில்லையா? பூங்குன்றன் உடைக்கும் உண்மை!
சென்னை: அமைச்சர்களும், நிர்வாகிகளும் தனது காலில் விழுந்து வணங்குவதை ஜெயலலிதா ஒரு போதும் ரசித்ததில்லை என்றும் அவர் வேண்டாம் என்று கூறியும் காலில் விழுந்தவர்களை தாமே பலமுறை பார்த்திருக்கிறேன் எனவும் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை பற்றி தெரிந்தவர்கள், பழகியவர்கள் யாரும் பெரிதாக அவரை பற்றி பேசாத நிலையில், கேள்விப்பட்டவர்கள், படித்தவர்கள் அதிகம் பேசுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

புரட்சித்தலைவி அம்மா
''புரட்சித்தலைவி அம்மாவை தெரிந்தவர்கள், பழகியவர்கள் யாரும் பெரிதாக அம்மாவைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் அம்மாவை கேள்விப்பட்டவர்கள், படித்தவர்கள் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. அம்மா அவர்கள் தனது காலில் விழுவதை ஏற்றுக்கொண்டார்கள் என்பதில் உண்மையில்லை. நிர்வாகிகள் அம்மா அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் போது வேண்டாம் என்று அம்மா சொல்ல சொல்ல காலில் விழுந்தவர்களை நானே பலமுறை பார்த்திருக்கிறேன். ''

காலில் விழும் போது
''அதுவும் மேடையில் காலில் விழும் போது வருத்தப்பட்டு என்னிடம் சொன்னதை நினைவு கூர்கிறேன். "என்னிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக இவர்கள் காலில் விழுகிறார்கள்; எனக்குத்தான் மக்களிடம் கெட்ட பெயர் கிடைக்கிறது". பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது நமது மரபாக தொடர்கிறது. ஆண்களிடம் ஆண்கள் காலில் விழும்போது தோள்களை பிடித்து வேண்டாம் என்று சொல்லலாம். பெண்களின் கால்களில் ஆண்கள் விழும்போது அவ்வாறு செய்ய முடியாது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.''

வாழ்த்து பெற்றார்கள்
''ஒருமுறை சொல்லலாம் பலமுறை சொல்லலாம். கேட்காதவர்களிடம் எத்தனைமுறை சொன்னால் என்ன? அடிமட்ட தொண்டனை உயர்த்திய கடவுளுக்கு எத்தனை முறை நன்றி சொன்னால் என்ன? இது நிர்வாகிகள் என்னிடம் பூரிப்போடு சொன்ன வார்த்தைகள்! ஒருமுறை வயதில் பெரிய கட்சிக்காரர் அம்மா அவர்களை தனது பிறந்தநாளில் சந்தித்தார். அவர் சந்தித்து சென்றவுடன் அம்மா அவர்கள், பூங்குன்றன் என்னைவிட வயதில் குறைந்தவர்கள் சந்திக்கும் போது பிறந்தநாள் ஆசிபெற்றார்கள் என்று செய்திக் குறிப்பில் குறிப்பிடுவீர்கள். என்னைவிட வயதில் பெரியவர்கள் சந்திக்கும்போது பிறந்தநாள் ஆசிபெற்றார்கள் என்று குறிப்பிடக்கூடாது மாறாக வாழ்த்து பெற்றார்கள் என்றே குறிப்பிடவேண்டும் என்றார்கள்.''

ஜெ.ஜெ. ரசிக்கவில்லை
''இதிலிருந்தே புரட்சித்தலைவி அவர்கள் காலில் விழுவதை ரசிக்கவில்லை, விருப்பமில்லாமல் பொறுத்துக்கொண்டார்கள் என்பதை உணர முடியும்.
இதைப் படித்து கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும், நீங்கள் கொடுக்கும் இடத்திற்கு வந்துவிட்டால் உங்கள் காலில் விழ ஒரு கூட்டம் தயாராக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.''

நிதர்சனம்
''ஏன் நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஆகிவிட்டால் நீங்களே தடுத்தாலும் உங்கள் காலில் மற்றவர்கள் விழுவதை தடுக்க முடியாது என்பதே நிதர்சனம். அம்மா மறைவிற்கு பிறகு தலைவர்களின் காலில் யாரும் விழவில்லை என்று நீங்கள் சொன்னால் மட்டுமே, அம்மா அவர்கள் காலில் விழுவதை ஆதரித்தார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்..!''












Click it and Unblock the Notifications