எதிர்க்கட்சிகள் வெளிநடப்பை தடுக்க விஜய் சொல்வது போல் சட்டசபை கதவுகளை பூட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
சென்னை: தான் பேசும் போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பை தடுக்க, சட்டசபையின் கதவுகளை இழுத்து பூட்ட வேண்டும் என முதல்வர் விஜய், கரூரில் கூறிய கருத்துக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில அளித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை அடுத்து அங்கிருந்து சென்னைக்கு செல்ல திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் வந்த போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்தித்ததே இல்லை. சில ஆங்கில ஊடகங்களில் நெறியாளர்கள் விஜய்யை நீலாங்கரை வீட்டில் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் அவர் பேட்டி ஏதும் கொடுக்கவில்லை.
தற்போது முதல்வரான பிறகு கூட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, பெண் பாதுகாப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை என்ற விமர்சனம் உள்ளது. பிரதமரே சந்திக்கும் போது விஜய் ஏன் சந்திக்க மறுக்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர்கள், எங்கள் முதல்வர் சொல்லில் எதையும் காட்டமாட்டார், செயலில் காட்டுவார். எப்போது செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும் என சப்பைக் கட்டு கட்டுகிறார்கள்.
முதல்வர் விஜய் எந்த கேள்விக்கு பதிலளிப்பதில்லை என திமுக குற்றம்சாட்டியது. மேலும் சட்டசபைக்கு சென்ற போது வாயை திறங்க சிஎம் சார் என பேட்ஜ் அணிந்து சென்றிருந்தனர்.
அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார். குதிரை பேரம், பெண்கள் பாதுகாப்பு, தவெகவினர் செய்யும் அலப்பறைகள் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பினார்.
அடுத்த நாள் முதல்வர் விஜய் பேசத் தொடங்கினார். அப்போது பார்ட்டி ஃபண்ட் என குறிப்பிட்டதும் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தனது பேச்சை தொடர்ந்த முதல்வர் விஜய், வாயை திறங்க , வாயை திறங்க என்கிறார்கள், நான் பேச தொடங்கியதும் வெளியே சென்றுவிடுகிறார்கள் என்றார்.
இந்த நிலையில் முதல்வரானதும் விஜய் முதல்முறையாக கரூர் சென்றிருந்தார். அங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போதும் தான் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர் வெளியே செல்ல தொடங்கிவிடுகிறார்கள்.
எனவே இனி நான் பேச ஆரம்பிக்கும் போது சட்டசபையின் அறைக் கதவுகளை அடைக்க வேண்டும் என கலகலப்பாக தெரிவித்தார். இந்த நிலையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார்.
அப்போது அவரிடம் சட்டசபையில் தான் பேச எழுந்தால் எதிர்க்கட்சியினர் வெளியே செல்லாத படி அவைக் கதவுகள் பூட்டப்படும் என விஜய் பேசியது குறித்து ஜேசிடியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், அவர் பேசிய வார்த்தையை வைத்து விளக்கம் கேட்கக் கூடாது. ஒரு குற்றச்சாட்டை கூறிவிட்டு அதற்கு பதில் கிடைக்கும் வரை பொறுமைக் காக்காமல் சட்டசபை உறுப்பினர்கள் வெளியேறுவது என்பது யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே பதில் சொல்வதை மற்ற உறுப்பினர்கள் கேட்க வேண்டும் என்பதைத்தான் அவர் கூறியதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கதவை பூட்ட சொல்கிறாரே என நினைக்க கூடாது. கதவை பூட்டுங்கள் என்றால் உட்கார்ந்து பதிலை கேளுங்கள் என்றுதான் அர்த்தம் என ஜேசிடி பிரபாகர் விளக்கம் அளித்திருந்தார்.














Click it and Unblock the Notifications