விரைவில் வினாத்தாள் மாற்றம்; 95% உயர்ந்த வருகைப் பதிவு! அரசுக்கு ஜெயரஞ்சன் கொடுத்த அலர்ட் ?
சென்னை: திமுக அரசு செயல்படுத்திய 11 திட்டங்கள் குறித்த குறை, நிறைகளை ஆய்வு செய்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் அறிக்கையாகக் கொடுத்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின்.

முதற்கட்டமாக இத்திட்டம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஊரான மதுரையில்தான் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் மூலம் முதல் கட்டமாக சுமார் 1.14 லட்சம் மாணவர்களும், இரண்டாம் கட்டமாக சுமார் 56,000 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். சராசரியாக, சுமார் 1.48 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.
பின்னர் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. மொத்தம் 17 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.

இந்த நிதியாண்டு முதல் கிராமப்புற அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் என்றும் 2023-24க்கான நிதிநிலை அறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது. இதனால் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகப் பலனடைய உள்ளனர்.
கடந்த ஆண்டு இத்திட்டம் குறித்து மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வுக்காக 25 மாணவர்கள் வரை சேர்க்கை உள்ள பள்ளிகள் மாதிரிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதனடிப்படையில் காலை உணவுத் திட்டத்தால் பலன்பெறும் 72% பள்ளிகளில் வருகைப் பதிவானது அதிகரித்திருந்தது கடந்த ஆய்வில் தெரியவந்தது.

அதாவது காலை உணவுத்திட்டம் செயல்படும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள, இத்திட்டம் செயல்படாத 412 பள்ளிகளோடு ஒப்பிட்டு தரவுகளைச் சேகரித்ததில் 72% பலன்பெறும் பள்ளிகளில் 77% பள்ளிகளில் வருகைப்பதிவு உயர்ந்துள்ளது என்பதைக் குழு கண்டறிந்து அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்போது மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தலைமையிலான குழு கடந்த சில மாதங்களாக அரசு அறிவித்துள்ள 11 விதமான திட்டங்கள் குறித்து ஆய்வுகளை நடத்தி வந்துள்ளது.

அது தொடர்பான முடிவுகளை ஜெயரஞ்சன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளார்.
காலை உணவுத் திட்டம் தொடர்பாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களின் வருகைப் பதிவேடு கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இத்திட்டக் குழுவின் ஆய்வின்படி 90 முதல் 95% மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளதாக ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு அடம்பிடிப்பது வெகுவாக குறைந்துள்ளது என்றும் காலையிலேயே 8 மணிக்கு எல்லாம் பிள்ளைகள் பள்ளிக்கு வந்துவிடுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் உணவை மாணவர்கள் விரும்பி உண்பதாக, பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாகத் தாய்மார்களிடம் இந்தத் திட்டத்திற்குப் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது எனவும் ஜெயரஞ்சன் கூறியுள்ளார்.

இதற்கு அடுத்து இரண்டு முக்கியமான திட்டங்கள் குறித்து ஆய்வை நடத்தி உள்ளது இந்தக் குழு. அதில் ஒன்று மக்களைத் தேடி மருத்துவம். இதன் மூலம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன? அதன் பயனாளிகள் இத்திட்டம் குறித்து என்ன சொல்கிறார்கள்? மேலும் இதில் இணைக்க வேண்டிய அம்சங்கள் என்ன ? என்பது பற்றிய தரவுகளைத் திரட்டி முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பு திட்டம். இது தொடங்கப்பட்ட போது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு திட்டம் என்பது சரி. அது என்ன நகர்ப்புறத்தில் வேலைவாய்ப்பு என்று விமர்சனம் வந்தது. நகரங்களில் உள்ளவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளனவே என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
ஆகவே அதை மனதில் கொண்டு இதில் உள்ள குறைநிறைகளை ஆராய்ந்து முதல்வரிடம் அறிக்கை அளித்துள்ளனர்.
அரசு என்னதான் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் அத்திட்டங் கள் போய்ச் சேராத வகுப்பினர் என்று சிலர் இருக்கவே செய்கிறார்கள். அதில் முதலானவர்கள் பழங்குடி மக்கள். அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் வசிப்பவர்கள். ஆகவே அவர்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகப் போய்ச் சேர்கிறதா? என ஒரு ஆய்வு நடத்திச் சமர்ப்பித்துள்ளது இக்குழு.

இந்த ஆய்வுகளிலேயே அதிரடியான ஒன்று இடம்பெற்றுள்ளது. திமுக அரசு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை இலக்கு வைத்து நடைபோட்டுக் கொண்டுள்ளது.
அந்தளவுக்குப் பொருளாதாரம் உயர வேண்டும் எனில் கல்வியின் தரம் உயர வேண்டும். பயனுள்ள கல்வியைப் பெற்றால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதை மனதில் வைத்து உயர்கல்வியில் பயன்படுத்தப்பட்டு வரும் வினாத்தாள் தரங்கள் பற்றிய ஆய்வையும் செய்து அறிக்கையாகக் கொடுத்துள்ளார்கள்.

தேர்வு முறை என்பது வெறும் மனப்பாடம் செய்ததை வாந்தி எடுக்கும் முறையாக உள்ளதா? அல்லது மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து பயன்பாடு சார்ந்ததாக உள்ளதா? அதில் செய்ய வேண்டிய மாற்றம் என்ன? குறைகள் என்ன? என்று அலசி ஆராய்ந்து இந்த அறிக்கையைத் தயார் செய்துள்ளது திட்டக்குழு.
அதில் கலை அறிவியல் சார்ந்த படிப்புகள், பொறியியல் சார்ந்த படிப்புகள் பற்றிய தரத்தைப் பிச்சு மேய்ந்துள்ளனர். அதில் உடனடியாக செய்ய வேண்டிய மாற்றத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications