தமிழகத்திற்கு வருகிறார் ஜான் ஆரோக்கியசாமி... அரசியல் சாணக்கியர்களை நாடும் தலைவர்கள்
சென்னை: பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து மும்பையில் இருந்து ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் வியூக வகுப்பாளரும் தமிழகத்திற்கு வர உள்ளார்.
திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவர் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் இருந்து விட்டு இப்போது ''பெர்சனா டிஜிட்'' என்ற பெயரில் மும்பையில் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி மேற்கொண்ட வித்தியாசமான பிரச்சாரத்திற்கு பின்னணியில் இவர் இருந்ததாக கூறப்படுகிறது.
வருங்கால முதல்வரே வருக... வருக... கமல் அலுவலகத்தில் ஒலித்த வரவேற்பு முழக்கம்
மக்கள் மறதி
அரசியல் கட்சிகள் என்னதான் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடத்தினாலும் அதன் தாக்கம் 2 நாட்களுக்கு மேல் மக்களிடம் இருப்பதில்லை. காரணம், அன்றாடப் பணிகளில் ஆயிரம் சிக்கல்கள், குடும்ப விவகாரங்கள் என கவலைக்கொள்வதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருப்பதால் அரசியல் கட்சிகள் செய்த போராட்டங்களை நினைவுகூற ஏது நேரம்.
பரப்புரை
இந்நிலையில் அரசியல் கட்சிகள் மக்களுக்காக ஆற்றும் பணிகளை, அவர்களுக்காக கொடுக்கும் குரல்களை முழு அளவில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கின்றன. அதில் தவறேதும் இருப்பதாக யாரும் கருத முடியாது. இதன் எதிரொலியாகவே அரசியல் கட்சிகள் மார்க்கெட்டிங் நிறுவனங்களை நாடத்தொடங்கியுள்ளன. கட்சிகளின் சக்திக்கேற்ப ஆலோசகர்கள் வைத்துக்கொள்ளப்படுகிறது.
புது வரவு
இதுவரை பிரசாந்த் கிஷோரை மட்டுமே அறிந்த தமிழக அரசியல்வாதிகள் இனி ஜான் ஆரோக்கியசாமி பற்றியும் அறிந்துகொள்ள போகின்றனர். ஆம், அவரும் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் இரண்டோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் எந்தக் கட்சிக்காக ஜான் ஆரோக்கியசாமி குழு களத்தில் இறங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.
பூர்வீகம் தமிழகம்
பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தை போல் ஜான் ஆரோக்கியசாமியின் பெர்சனா டிஜிட் நிறுவனத்துக்கும் வட இந்திய அரசியல் தலைவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அண்மையில் நடந்த மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வியூக வகுப்பாளராக செயல்பட்டார் இந்த ஜான் ஆரோக்கியசாமி.மும்பையில் நிறுவனம் நடத்தினாலும், ஜான் ஆரோக்கியசாமி படித்தது வளர்ந்தது எல்லாமே திருச்சியில் என்பது குறிப்பிடத்தக்கது.