தலைமைச் செயலாளர் மாற்றம்? உதயநிதிக்கு து.முதல்வர் பதவி..! லக்ஷ்மணன் டிகோட்!
சென்னை: தமிழக தலைமைச்செயலாளர் விரைவில் மாற உள்ளார் என்றும் அதனையடுத்து உதயநிதி து.முதல்வராகப் பதவியேற்க உள்ளார் என்றும் மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான 5 ஆம் கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகின்றது. கிட்டத்தட்ட ஆட்சி மாற்றம் உறுதியாக இருக்கும் என்றே பேச்சுக்கள் அடிபடுகின்றன. அரசியல் வியூகர்கள் 'இந்தியா' கூட்டணிக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகக் கருத்து கூறி வருகின்றனர்.

'இந்தியா' கூட்டணி என்றால் அது திமுகவை விட்டுவிட்டுப் பேச முடியாது. அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான பட்டியலுடன் திமுக தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
அதனிடையே ஜூன் 2க்கு பிறகு திமுக மாநில அமைச்சர்களில் மாற்றம் நடக்கும் என்று சில நாள்களாகவே தகவல் கசிந்து வருகிறது. கூடவே உதயநிதிக்கு து.முதல்வர் பதவி என்பதுதான் ஹைலைட் மாற்றம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அவருக்கு திமுக இளைஞரணி மாநாடு முடிந்தவுடனேயே து.முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பேச்சுகள் அடிப்பட்டன. ஆனால், தேர்தல் காலத்தை மனதில் வைத்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் உடன்படவில்லை என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் திமுக அமைச்சரவை மாற்றம் பற்றி மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன் சில விசயங்களைப் பேசி இருக்கிறார். யார் யாருக்கு என்ன பதவிகள் கிடைக்கலாம் என்பது குறித்தும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

திமுக அமைச்சரவை மாற்றம் பற்றி லக்ஷ்மணன் பேசுகையில், "இரண்டு மாதங்கள் முன்னதாகவே உதயநிதியைத் துணை முதல்வராகப் பதவி வழங்க இருப்பதாகப் பேச்சு எழுந்தது. அப்போது கூட நான் அதை மறுத்துப் பேசி இருந்தேன். தேர்தலை முன்னால் வைத்துக் கொண்டு, இந்தச் செயலை முதல்வர் ஸ்டாலின் செய்ய மாட்டார். அது பேசு பொருளாக மாறிவிடும். அதை ஸ்டாலினும் அறிவார். ஆகவே அதற்குச் சாத்தியம் இல்லை என்று சொல்லி இருந்தேன்.
இப்போது மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்டது. இனிமேல் திமுகவின் ஒவ்வொரு அடியும் அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே எடுத்துவைக்கப்படும். ஆகவே, மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகளில் மாற்றம் இருக்கலாம்.
அல்லது ஒரே மாவட்டத்திற்கு இரண்டு பொறுப்பாளர்களைப் போடலாம். அமைச்சரவைக்குள் பிரதிநிதித்துவம் இல்லாமல் சில சமூகங்கள் உள்ளன. அந்தச் சமூகத்தின் பிரதிநிதிக்கு அமைச்சர் பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
அதற்கான தருணமாக இது இருக்கிறது. இதில், இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அது தொடர்பாக திமுக சில ஆலோசனைகளைச் செய்யும்.

அமைச்சரவையில் இடம்பெறுவதா? இல்லையா? இடம்பெற்றால் எத்தனை அமைச்சர்கள்? யாருக்கு என்ன பதவி? இவை குறித்து எல்லாம் விவாதித்து முடிவு எடுப்பார்கள். அதற்காகக் கால அவகாசம் திமுகவுக்குத் தேவைப்படும். அதற்கான சூழலும் உள்ளது.
அப்படி மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்றால், தமிழ்நாட்டில் உடனடியாக அமைச்சர்கள் மாற்றம் நடக்கும் என்பது உறுதி.
செந்தில் பாலாஜியின் ஜாமின் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும் என திமுக நினைத்திருந்தது. ஆனால், விசாரணையையே 2 மாதங்கள் வரை தள்ளிப் போட்டுவிட்டார்கள். அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுவிட்டது.
அப்படிப் பார்த்தால் 5 அமைச்சர்களுக்கான மாற்றம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பட்டியலில் உதயநிதியும் து.முதல்வராகப் பதவி வழங்கப்படலாம். அது பெரிய விசயம் இல்லை. அவர் ஏற்கெனவே பாதி முதல்வராகத்தான் செயல்பட்டு வருகிறார். இது அவருக்கு ஒரு அதிகாரப்பூர்வமான ஒரு அங்கீகாரம் அவ்வளவுதான்.

அப்படி து.முதல்வர் பதவி உதயநிதிக்கு வழங்கப்படும் போது தொழில்துறை அமைச்சர் பொறுப்பும் கூடுதலாகக் கொடுக்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது.
அப்படி என்றால், இப்போது தொழில்துறை அமைச்சராக உள்ள டிஆர்பி ராஜாவுக்கு எந்தத் துறை வழங்கப்படும்? அது பற்றி ஆராய்ந்தால், அது சங்கிலி போல நீண்டு கொண்டே செல்கிறது. அதனால்தான் 5 துறைகளுக்கான அமைச்சர்கள் மாற்றம் இருக்கும் என்று சொல்கிறேன்.
அந்த வரிசையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் வேறு இலக்கா வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அவரும் இப்போது தவறுகளை உணர்ந்துவிட்டார். ஆகவே, நல்ல பொறுப்பு கிடக்கலாம்.
அதைப்போல சேகர்பாபுக்கு மேலும் உயர்வான பொறுப்பு கிடைக்கும் என்கிறார்கள். இவரைப் போல் அமைச்சர் முத்துசாமி தனக்கு அதிக சுமை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதைக் குறைக்க வேண்டும் எனத் தலைமையிடம் முறையிட்டுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிப்படுகின்றன. அவரிடம் இருந்து சில பொறுப்புகள் வேறு சிலருக்கு வழங்கப்படலாம்.
சிறுபான்மை சமூகத்திற்கு மீண்டும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதுவும் உறுதியாக நடக்கும் என்கிறார்கள்.
இப்போது உள்ள தலைமைச்செயலாளர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். அடுத்து முதலமைச்சரின் செயலாளர் முருகானந்தம் அந்தப் பதவிக்கு வரலாம்" என்று பேசி இருக்கிறார்












Click it and Unblock the Notifications