திமுகவிற்கு உதவி செய்த ஆளுநர் ரவி.. புரியாமல் விழிக்கும் பாஜக.. இவர் என்ன இப்படி சொல்றாரே? குழப்பம்!
சென்னை; திமுகவை ஆளுநர் தெரிந்தோ தெரியாமலோ காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார். திமுகவிற்கு ஆளுநர் ரவி உதவி செய்து கொண்டு இருக்கிறார். இதை பாஜகவே உணரவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் செயலற்றவராக இருக்கிறார், ஆளுநர் ரவியின் செயல்பாட்டால் பெரும் அரசியலமைப்பு சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளது. அதில், ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார்.

தமிழ்நாடு மக்களின் உரிமைகளை தமிழ்நாடு ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதில் குறுக்கே நிற்கிறார், என்று வழக்கில் தமிழ்நாடு அரசு கூறியது.
இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையான கண்டனங்களை ஆளுநர் ரவிக்கு எதிராக வைத்தார். காரணத்தோடு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தால் மட்டுமே, மீண்டும் திருப்பி அனுப்பும்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார். நவம்பர் 10-ந் தேதி உத்தரவிட்ட பின்னர் நவம்பர் 13-ந் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கிறாரே என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

பேட்டி: உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆளுனரை இப்போது எதிர்க்கும் திமுக.. முன்னதாக அதிமுக ஆட்சியில் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராகவே புகார்களை கொடுத்தார்கள். கட்சி மூத்த தலைவர்களை அனுப்பி மும்பை ராஜ்பவனில் இருந்த தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் வித்தியாசகரிடம் புகார் கொடுத்தவர்கள்தான் இவர்கள்.. ஆளுநர் இல்லை என்றால் சர்வாதிகாரம் வந்துவிடும். எதிர்க்கட்சிகளுக்கு ஒரு ஷீல்ட்.,
மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் அந்த அதிகாரத்தை விரும்புகிறார்கள். மோடியே மாநில முதல்வராக ஆளுநர்களை எதிர்த்தார். ஆனால் இப்போது அவரே ஆளுநர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார். ஆளுநர் பதவி இருக்கலாம். ஆனால் அதை தவறாக பயன்படுத்த கூடாது. தங்களுக்கு இருக்கும் மரியாதையை அதிகாரத்தை மோசமாக பயன்படுத்த கூடாது. அதிமுக ஆட்சியில் அவர்கள் அமைச்சர்கள் மீதே நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் சென்றது திமுக தானே.

ஆளுநர் செய்யும் உதவி: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆளுநர் உத்தரவிடலாம் என்று கூறியது ஸ்டாலின் தானே. இப்போது ஆளுநரை திமுக எதிர்ப்பது சரிதான். அதில் தவறே இல்லை. ஆனால் அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதும் இதை செய்திருக்க வேண்டும். இப்போது ஆளுநர் ஆடுவது எல்லாம் மோடி மூலம்தான். டெல்லி கொடுக்கும் பவரில்தான் இவர்கள் ஆட்டம் போடுகிறார்கள். ஆனால் ஆளுநர் இல்லை என்றாலும் சிக்கல்தான். ஆளுநர் இல்லை என்றால் மாநில ஆட்சிகள் சர்வாதிகாரமாக மாறிவிடும்.
ஆளுநர் செய்யும் அட்டூழியம் காரணமாக திமுகவின் சில தவறுகள் மறக்கடிக்கப்படுகின்றன. திமுகவிற்கு எதிராக மக்கள் பிரச்சனைகள் உள்ளன. மக்கள் மனநிலை உள்ளது. ஆனால் அதை ஆளுநர் மறக்கடித்துக்கொண்டு இருக்கிறார். திமுகவை ஆளுநர் தெரிந்தோ தெரியாமலே காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார். திமுகவிற்கு ஆளுநர் ரவி உதவி செய்து கொண்டு இருக்கிறார். இதை பாஜகவே உணரவில்லை. பாஜக இதற்கு பின் இருக்கும் பிரச்னையை உணரவே இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications