லோக்சபா தேர்தலில் அதிமுக 4வது இடத்துக்கு போகும்! எடப்பாடியை சீமான் முந்துவார்- இப்படி ஒரு கணிப்பு
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்படும் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல வாக்கு சதவீதத்தை எடுத்துக் கொண்டால் அதிமுகவை நாம் தமிழர் கட்சி முந்தவும் வாய்ப்பிருப்பதாக அவர் கணித்துள்ளார்.
ஒன் இந்தியா தமிழ் அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். வட மாவட்டங்களை பொறுத்தவரை திமுகவுக்கும் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கும் தான் போட்டி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்படும் என பத்திரிகையாளர் ப்ரியன் சொல்வதை ஏனோ தானோ என்று புறந்தள்ளவும் முடியாது. ஏனெனில் அதற்கான காரணங்களை அவர் விளக்கியுள்ளார்.

பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் இடம்பெற்றால் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நிச்சயம் ஓட்டுக்களை பிரிப்பார்கள் என்றும் மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை வாக்குகள் பாஜக, அதிமுக என சிதறக்கூடும் என்றும் கூறியுள்ள பிரியன் வட மாவட்டங்களில் பாமகவுக்கு அடுத்ததாக தான் அதிமுக வரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஒன்று ஜெயலலிதாவை போன்ற தலைவர் கிடையாது என்றும் ஜெயலலிதா 2014ல் தனித்து நின்று 39 தொகுதிகளை வென்றது போல் எடப்பாடி பழனிசாமியால் வெற்றிபெறவே முடியாது எனவும் கூறிய பத்திரிகையாளர் பிரியன், பாஜக கூட்டணியை விட்டு விலகியதால் அதிமுகவுக்கு எந்த பலனும் இருக்காது எனக் கணித்துள்ளார். கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எடுத்த இந்த முடிவு பல விவகாரங்களில் அவருக்கு பின்னடைவை கொண்டு வரும் எனக் கூறியுள்ளார்.
அதிமுகவின் வாக்கு வங்கியை பயன்படுத்த பாஜக மேலிடம் விரும்புவதாகவும் இதனால் தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி சேர அதிக வாய்ப்புகள் இருப்பதாக தாம் பார்ப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். இதனிடையே எடப்பாடி பழனிசாமியோ பாஜகவுடனான கூட்டணி கதம் கதம் தான் என்று பாபா படத்தில் வரும் ரஜினிகாந்த் வசனத்தை போல் முடிந்தது முடிந்தது தான் என்பதில் உறுதியாக உள்ளார்.












Click it and Unblock the Notifications