''விஜயகாந்துக்கு கிடைத்த வரவேற்பு பிரேமலதாவுக்கு கிடைக்காது''! என்ன இவர் இப்படி சொல்லிட்டாரு?
சென்னை: விஜயகாந்துக்கு கிடைத்த வரவேற்பு பிரேமலதாவுக்கு கிடைக்காது என மூத்த பத்திரிகையாளர் பிரியன் தடாலடி கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
தேமுதிகவின் எதிர்காலம் கேள்விக்குறி தான் என்றும் பத்தோடு பதினொன்றாக தான் அந்தக் கட்சி இனி பார்க்கப்படும் எனவும் அவர் விமர்சித்துள்ளார். செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வழியில் பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

தேமுதிகவின் 18ஆம் ஆண்டு செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று நடைபெற்ற நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரேமலதா தேமுதிக பொதுச்செயலாளர் ஆனது பற்றி செய்தி தொலைக்காட்சி ஒன்றில் தனது கருத்தை பகிர்ந்துகொண்ட மூத்த பத்திரிகையாளர் பிரியன், தேமுதிகவின் எதிர்காலம் சூனியமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் என்ன நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்திற்கான பாதையிலிருந்து தேமுதிக விலகி பல வருடங்கள் ஆகிவிட்டதாகவும் இதனால் விஜயகாந்துக்கு கிடைத்த வரவேற்பும், மரியாதையும் பிரேமலதாவுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விஜயகாந்தை பொதுக்குழுவுக்கு அழைத்து வந்த நிகழ்வே மனிதாபிமானமற்ற செயலாகவே தாம் பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
தேமுதிகவின் தேவை தமிழ்நாட்டில் குறைந்துவிட்டதாகவும் சீமானின் நாம் தமிழர் கட்சியும், பாஜகவும் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார். 2014, 2016, 2019, 2021 என எல்லா தேர்தல்களிலும் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிவை நோக்கியே சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் இப்படி கூறும் நிலையில் மற்றொரு பக்கம் நடிகரும், விஜயகாந்தின் நண்பருமான தியாகு, பிரேமலதா தலைமையில் தேமுதிகவுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு எனத் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் பொதுக்குழுவுக்கு வந்திருக்கிறார் என்பதை பார்க்கும் போது தாம் அளவுகடந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தனது வேண்டுதல் வீண்போய்விடவில்லை எனவும் நடிகர் தியாகு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications