ஜெயலலிதா கவலைக்கிடம் என்கிற தகவலை மறைத்த மாஜி ஆளுநர் வித்யாசகர் ராவ்!ஆறுமுகசாமி கமிஷன் பரபர புகார்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்தார் என்ற தகவலை அறிந்தும் ஜனாதிபதிக்கு அப்போது பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசகர் ராவ் தெரியப்படுத்தவில்லை என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆளுநராக இருந்த வித்யாசகர் ராவ் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளதாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே பிரதமர், ஆளுநர் சார்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து பூங்கொத்து அனுப்பப்பட்டன. அதற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார்.

3 முறை அப்பல்லோ போன வித்யாசகர் ராவ்
ஜெயலலிதாவைப் பார்க்க வித்யாசகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு 3 முறை வந்ததாக அவரது செயலாளர் ரமேஷ் சந்த் மீனா சாட்சியம் அளித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை ஆளுநருக்கு அனுப்பப்படவில்லை. அதை செய்தி தாள்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டார் ஆளுநர். அப்பல்லோ பிரஸ் ரிலீசில் ஜெயலலிதா தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

கவலைக்கிடம் என மறுப்பு
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிரதாப் சி ரெட்டியை ஆளுநர் சந்தித்தார். ஜெயலலிதாவை தாமும் ஆளுநரும் பார்த்த போது பல குழாய்களின் மத்தியில் அவர் காணப்பட்டார் என ரமேஷ்சந்த் மீனா தெரிவித்தார். ஜனாதிபதிக்கு 2016-ம் ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி ஆளுநர் எழுதிய கடிதத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வார்டுக்கு சென்றதாகவும் அவர் மயக்கத்தில் இருந்தார் எனவும் தெரிவித்திருக்கிறார் ஆளுநர். அதில் ஜெயலலிதா கவலைக்கிடமாக இருந்தார் என ஆளுநர் தெரிவிக்கவில்லை.

2-வது முறையாக அப்பல்லோவில்..
ரமேஷ் சந்த் மீனாவின் சாட்சியங்களின் படி, ஜெயலலிதா கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் ஆளுநர் அப்படி குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. 2-வது முறையாக ஜெயலலிதாவை பார்க்க ஆளுநர், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற போது ஜெயலலிதா அவரைப் பார்க்கவில்லை; ஆனால் ஆளுநர் வித்யாசகர் ராவ் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்திருக்கிறார். அப்போது ஜெயலலிதா பந்துவீச்சு பிசியோ தெரபி செய்து கொண்டிருந்தார் என பல சாட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

டிசம்பர் 4-ல் அப்பல்லோவில்
மேலும் ஜெயலலிதாவின் இதயம் செயலிழந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் வருகை தந்தார். ஆனால் தரை தளத்திலேயே அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியை சந்தித்துவிட்டு சென்றார். ஆனால் ஜெயலலிதாவை பார்க்கவில்லை.. அப்படி தரை தளத்தில் இருந்து புறப்பட்டுவிட்டார். இவ்வாறு ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications