ஆளுநர் 4 எம்எல்ஏ கட்சித் தலைவரா? 234 எம்எல்ஏக்களை கொண்ட அவையை அவமதிப்பவரா! தகித்த நீதியரசர் சந்துரு
சென்னை : நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஆளுநர் 4 எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைவரா ? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பவரா என நீதியரசர் சந்துரு கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆளுநர் நீண்ட நாட்களாக ஒப்புதல் அளிக்காமலும் அந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

ஆளுநருக்கு கண்டனம்
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த 1ஆம் தேதியை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் சட்டமன்றத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது. ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது. ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் எனவும், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டு வருகின்றன.

கட்சிகள் போராட்டம்
இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி வேல்முருகன், திராவிடர் விடுதலைக்கழகம் ஆகியோர் போராட்டம் அறிவித்துள்ளதால் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#getoutravi ஹேஸ்டேக்
தொடர்ந்து தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி #getoutravi என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுவரை டிவிட்டரில் மட்டும் ஒரு லட்சம் ட்விட்கள் பதிவிடப்பட்டுள்ளன. மேலும் முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், மாணவர்கள் ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீதியரசர் சந்துரு கண்டனம்
இந்தநிலையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனங்களை நீதியரசர் சந்துரு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள நீதியரசர் சந்துரு "தா.நா. ஆளுநர் 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சித் தலைவரா? 234 எம்எல்ஏக்களை கொண்ட அவையை அவமதிப்பவரா!" எனப் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பலரும் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications