உறவினரால் கொல்லப்பட்ட மாஜி எம்பி மஸ்தான்.. "தந்தை கொலைக்கு நீதி கிடைக்கும்" மகன் ஹரீஷ் நம்பிக்கை!
சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் துணைத் தலைவராக இருந்த மஸ்தானை, அவரது உறவினரே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தந்தை மஸ்தானின் மரணம் குறித்து பேசியுள்ள அவரது மகன் ஹரிஷ் ஷாநவாஸ், தந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்தவர் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் மஸ்தான். இவர் 2005ல் திமுகவில் இணைந்து, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளராக பணியாற்றினார். மருத்துவரான மஸ்தானின் மனைவி சிவபாக்கியமும் மருத்துவர். இவர்களுக்கு ஹாரிஸ் ஷாநவாஸ் என்ற மகனும், ஹரிதா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 22ம் தேதி மாலை ஹாரிஸ் ஷாநவாஸுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அன்று அதிகாலை மஸ்தான், தனது உறவினரும், ஓட்டுநருமான இம்ரான் பாஷாவுடன் காரில் செங்கல்பட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, மஸ்தானுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி, கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மரணத்தில் சந்தேகம்
ஆனால் மஸ்தானை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவின் முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் மஸ்தான் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், மஸ்தான் முகத்தில் காயம் இருந்ததால், அவரின் மகன் காவல்துறையினரிடம் புகாரளித்தார். பின்னர் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதிர்ச்சி
மஸ்தான் மரணம் தொடர்பாக தாம்பரம் காவல் துணைஆணையர் சிபிச் சக்ரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், இம்ரான் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஐந்து பேர் திட்டமிட்டு மஸ்தானை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

5 பேர் கைது
இதன் பின்னர் இம்ரான், தனது உறவினர் குரோம்பேட்டை தமீம் சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்களான சைதாப்பேட்டை நசீர், பம்மல் தவுபிக் அகமது, குரோம்பேட்டை லோகேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இம்ரான் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மஸ்தானின் மகன் ஹரிஷ் ஷாநவாஸ் கூறுகையில், என் தந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து போலீசில் புகார் அளித்திருந்தோம்.

நீதி கிடைக்கும்
பின்னர் பிரேத பரிசோதனை முடிவுகள் மற்றும் காவல்துறை நடத்திய விசாரணை அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என் தந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். விரைவாக குற்றவாளிகளை கைது செய்த தமிழக காவல்துறை மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications