மாறி, மாறி பேசாதீர்... தேமுதிகவுக்கு கே.எஸ். அழகிரி அட்வைஸ்
சென்னை: தேமுதிக கூட்டணிக்காக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது ஆரோக்கிய அரசியல் அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில் கூட்டணிக் கட்சிகள் 20 தொகுதிகளிலும் மற்ற 20 தொகுதிகளில் திமுகவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து வருவதாக தெரிகிறது.

தேமுதிக நிர்வாகிகள்
மேலும், தேமுதிக நிர்வாகிகள் நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து, விளக்கமளித்த துரைமுருகன் கூட்டணி குறித்து பேசுவதற்காக தேமுதிக நிர்வாகிகள் தனது இல்லத்திற்கு வந்ததாக கூறினார். அப்போது தங்கள் அணியில் சீட்டு எதுவும் இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பி விட்டதாகவும் பதிலளித்தார்.

சுதீஷ் விளக்கம்
துரைமுருகனின் பதில் குறித்து தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஆம். துரைமுருகனிடம் தான் பேசியது உண்மை என்றும் ஆனால் கூட்டணி குறித்து பேச வில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

கே.எஸ். அழகிரி கருத்து
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக அதிமுகவுடனோ , திமுகவுடனோ மாறி மாறி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சரியோ, தவறோ நம்முடைய கொள்கைக்கு ஒத்து வருகின்ற கட்சிகளுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

முடிவுக்கு வரவேண்டும்
கூட்டணியில் ஒரு சீட்டு குறையலாம், கூடலாம் அதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு துருவங்களுடனும், இரண்டு தத்துவங்களுடனும் பேசுவது தவறு . முதலில் சில அரசியல் கட்சிகள் அந்த முடிவுக்கு வரவேண்டும் என கூறினார்.












Click it and Unblock the Notifications