ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸே போட்டி.. கே எஸ் அழகிரி தகவல்
சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் நடந்தால் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி முடிவடைந்தது. வரும் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மரணமடைந்த வேட்பாளர்
ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் (63) நுரையீரல் தொற்று காரணமாக கடந்த இரு வாரங்களாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இடைத்தேர்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ் வெற்றி பெற்றால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். மாதவராவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜோதிமணி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
மீண்டும் காங்கிரஸ் போட்டி
மாதவராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டு போட்டியிடுவார்.
வெளிநாட்டுக்கு தடுப்பூசி
இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது ஏன் என கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பினார். தமிழகத்தை பொருத்தமட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.