அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு... பதவி நீக்கக் கோரிக்கை
சென்னை: அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திரபாலாஜியை நீக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு வலுசேர்க்கும் விதமாக மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் இணைந்துள்ளனர்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அநாகரீகம்
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைகிறவரை வாய்மூடி மௌனிகளாக இருந்த அமைச்சர்கள் இன்றைக்கு வரம்பு மீறி அநாகரீகமாகப் பலகுரல்களில் பேசுகிற சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவர்களை கட்டுப்படுத்துகிற அதிகாரம் இல்லாதவராக இருக்கிறாரா? இத்தகைய அநாகரீகப் பேச்சுகள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகிறாரா? இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர்களிடம் வாய்க்கு வந்தபடி கீழ்த்தரமான அநாகரீகமான வார்த்தைகளை சமீபத்தில் அள்ளி வீசியிருக்கிறார்.

ஆதாரமற்ற
திருச்சியில் பா.ஜ.க. நிர்வாகி கொல்லப்பட்டதற்கு தனிப்பட்ட பகைதான் காரணமே தவிர மதமோ, அரசியலோ காரணமல்ல என்பதை காவல்துறையினர் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ இந்தக் கொலைக்குக் காரணம் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று பேசியிருப்பது அப்பட்டமான சட்டவிரோதப் பேச்சாகும். அவரது பேச்சுக்கு என்ன ஆதாரம்? ஒரு அமைச்சரே, ஒரு கொலை குறித்து ஆதாரமற்ற கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் கூறினால் காவல்துறையினரின் விசாரணையை பாதிக்காதா?

முறியடிப்போம்
அமைச்சரவையில் ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து நீடிப்பாரேயானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மதக்கலவரங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உருவாகிவிடுமென எச்சரிக்க விரும்புகிறேன். தமிழகத்தில் ரத்தக்களறியை உருவாக்குவதுதான் ராஜேந்திர பாலாஜியின் நோக்கம் என்றால் அதை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக மதச்சார்ப்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது.

கோரிக்கை
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சுகள் தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையிலேயே உள்ளதாகவும், அவரது பேச்சுக்கள் அதிமுக கொள்கைக்கு எதிரானது எனவும் தெரிவித்தார். பொறுப்பற்ற முறையில் பேசி வரும் ராஜேந்திரபாலாஜியை அமைச்சரவையில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications