சந்திரயான் விஞ்ஞான உலகம் வியக்கின்ற மாபெரும் வெற்றி.. பிரதமர் மோடிக்கு காதர்மொகிதீன் பாராட்டு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி அளித்து வரும் ஆதரவு வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது என்றும் சந்திரயான் இலக்கை எட்ட முடியாதது தோல்வி அல்ல; விஞ்ஞான உலகம் வியக்கின்ற மாபெரும் வெற்றி என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
சந்திரயான் நிலவை நோக்கிய பயணம் அறிவியல் துறையில் இந்தியா நடத்திய அற்புதங்களில் ஒன்றாகும்.

உலக நாடுகள் முன்வரவில்லை
இதுவரை நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யும் முயற்சியை உலகில் விஞ்ஞான வளர்ச்சி பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற எந்த நாடுகளும் முன்வரவும் இல்லை. முயற்சி எடுக்கவும் இல்லை. நிலவின் இருண்ட பகுதி என அவர்கள் ஒதுக்கி இருக்கலாம்.

சிவன் அண்ணாதுரை
ஆனால், இந்திய விஞ்ஞானிகள் குறிப்பாக தமிழகத்தில் உருவாகி தரணியெங்கும் விஞ்ஞான உலகில் அற்புதத்தை நிகழ்த்தி வரும் விஞ்ஞானிகள் அண்ணாதுரையும், சிவனும் அவர்களின் குழுவினரும் நிலவின் இருண்ட பகுதியில் மறைந்து கிடக்கின்ற அதிசயங்களை உலகறிய செய்யும் நோக்கில் சந்திரயானை உருவாக்கி இருக்கிறார்கள்.

இது தோல்வி அல்ல
99. 9 சதவீதம் வெற்றியை எட்டிய கடைசி நிமிடத்தில் தங்களது இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தோல்வி அல்ல. விஞ்ஞான உலகம் வியக்கின்ற மாபெரும் வெற்றியாகும். இந்திய விஞ்ஞானிகள் உலக விஞ்ஞானிகளின் பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றிருக்கிறார்கள்.

மத்திய அரசின் கடமை
மத்திய அரசு குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய விஞ்ஞானிகளின் அதிசயத்தக்க ஆய்வுகளுக்கு தொடர்ந்து ஆதரவும், உற்சாகமும் அளித்து வருவது வரவேற்று பாராட்டுக்குரியதாகும். ஒரு மயிரிழையில் தப்பியிருக்கிற முழு வெற்றியை இந்திய விஞ்ஞானிகள் பெற்று உலகத்தின் பாராட்டை பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி ஊக்கமளித்து உதவிகளை ஊக்குவித்து வருவது மத்திய அரசின் கடமையாகும் என்பது மக்களுடைய எதிர்ப்பார்ப்பாகும்.இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications