"மிஸ்டர் அண்ணாமலை".. கொந்தளித்த விருதாம்பிகை.. பாஜகவுக்கு எதிராக பொங்கிய காடுவெட்டி குரு மகள்
காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்
சென்னை: நம் வன்னியர் மக்கள் மிஸ்டர் அண்ணாமலையையும் பாஜகவையும் புறக்கணிக்க வேண்டும் என்று காடுவெட்டி குரு மகள் விடுத்துள்ள அறிக்கை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே, அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.. அதிமுகவை முந்திக் கொண்டு, திமுகவை விமர்சித்து வருகிறார் அண்ணாமலை.
ஒருகட்டத்தில் திமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்றும் அறிவிக்க ஆரம்பித்துள்ளார்.. இதையடுத்து, திமுக தவிர, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக போன்ற கட்சிகள் அண்ணாமலையை அவ்வப்போது கண்டித்தும், விமர்சித்தும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது..

பாஜக - அண்ணாமலை
சில சமயம் அண்ணாமலை மீது போலீசில் புகார் தரும் அளவுக்கும் விவகாரம் வந்துவிடுகிறது.. இந்நிலையில், பாமகவின் மறைந்த தலைவர் காடு வெட்டி குருவின் மகளும் அண்ணாமலைக்கு வன்னியர் விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

இடஒதுக்கீடு
"எந்த ஒரு சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டையும் உரிமைகளையும் வன்னியர் மக்கள் கொடுக்கக்கூடாது என்று கூறியது கிடையாது. மற்ற சமுதாயத்திற்கு முன்னின்று இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர்களும் வன்னியர்களே. இந்த இட ஒதுக்கீட்டுக்காக 25 உயிர்களை பலி கொடுத்ததும் வன்னியர்களே. ஆனால் இன்று அண்ணாமலை வரலாறு தெரியாமல் வன்னியர் மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராடும் அமைப்புகளை ஒன்று திரட்டி அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல.

சுப்ரீம்கோர்ட்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோது ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும், எதிர்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் வன்னியர்களின் உரிமை பாதிக்கப்படக் கூடாது என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்த பொழுது பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் இதைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தனர்.

வன்னியர்கள்
தமிழ்நாட்டின் மிகப்பெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்தை அண்ணாமலை எதிர்ப்பது நல்லதல்ல. வன்னியர் மக்கள் கஷ்டத்தில் இருக்கும் பொழுது எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலையையும் பாஜகவையும் நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை. மேலும் எங்களை துன்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Recommended Video

மிஸ்டர் அண்ணாமலை
நம் 3 கோடி வன்னியர் குல சத்திரியர்களை நான் கேட்டுக்கொள்வது நாம் அனைவரும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் பயணிக்கலாம். நீங்கள் அனைவரும் யாரை வேண்டுமானாலும் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கலாம். நமது உரிமைகளுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை கட்சி பாகுபாடு இன்றி எதிர்ப்பது நமது கடமை. எனவே நம் வன்னியர் மக்கள் மிஸ்டர் அண்ணாமலையையும் பாஜகவையும் புறக்கணிக்க வேண்டும் என்று உங்கள் மாவீரன் காடுவெட்டியார் மகளாக கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications