ஜெயங்கொண்டம் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக காடுவெட்டி குரு மனைவி சொர்ணலதா போட்டி
சென்னை: பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் (குருநாதன்) மனைவி சொர்ணலதா போட்டியிடுவார் என அறிவிக்கபட்டுள்ளது.
பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் வன்னியர் சங்க தலைவராகவும் திகழ்ந்தவர் காடுவெட்டி குரு. 2018-ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் காடுவெட்டி குரு காலமானார்.

காடுவெட்டி குரு குடும்பம்
இதன் பின்னர் பாமகவுக்கும் காடுவெட்டி குருவின் குடும்பத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை, பண்ருட்டி தி. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார்.

திமுக ஆதரவு- மஞ்சள் படை
காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை உருவாக்கினார். அண்மையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக கனலரசன் தெரிவித்தார்.

காடுவெட்டி குரு மனைவி போட்டி
இந்த நிலையில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா போட்டியிடுகிறார். அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சொர்ணலதா பெயர் இடம் பெற்றுள்ளது.

சுயேட்சையாக போட்டியிட திட்டம்
முன்னதாக ஜெயங்கொண்டம் தொகுதியில் சொர்ணலதா, ஏற்கனவே சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்தார். இதையடுத்து இந்திய ஜனநாயகக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று சொர்ணலதா அக்கட்சியின் வேட்பாளராக களமிறங்குகிறார்.

ஜெயங்கொண்டம் பாமக
ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் பாலு போட்டியிடுகிறார். பாலுவுக்கு சீட் கொடுத்த அதிருப்தியில் வன்னியர் சங்க தலைவரான வைத்தி பாமகவை விட்டு விலகினார். இப்போது காடுவெட்டி குருவின் மனைவி பாமக வேட்பாளரை எதிர்த்து களம் காண்கிறார்.












Click it and Unblock the Notifications