கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. எந்த தேதியில் வங்கிக்கணக்கில் வரும்.. வெளியான தகவல்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர்களுக்கு வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியன்று ரூபாய் 1000 செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்த முடியாது என்பதால் இந்த திட்டம் நேற்றே தொடங்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எனது அரசியல் பயணத்துக்கான உந்துசக்திகளுக்கு எல்லாம் சிகரம் வைத்ததுபோல் இருப்பதுதான் காஞ்சி மாநகரம் என கூறியுள்ளார். 18 வயதில் அண்ணா சுடரை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்தேன். தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் நீடிக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறான் என்றார் பேரறிஞர் அண்ணா. அதேபோல் இன்று 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் மகளிர் உரிமைத்தொகையை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.
பயன் எதிர்பார்க்காமல் வாழ்நாளெல்லாம் உழைக்க கூடிய பெண்களுக்கு அளிக்க கூடிய அங்கீகாரம்தான் ஆண்டுக்கு 12,000 ரூபாய். பெண்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பயன்படும். மாதம் 1000 ரூபாய் தங்கள் வாழ்வினை சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும் மனிதநேய அடிப்படையிலான, பெண்ணுரிமையைக் காக்க கூடிய எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு கைவிட்டு விடாது என்று கூறினார்.
இதனிடையே இன்று தொடங்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 18ஆம் தேதிக்குள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இனி வரக்கூடிய ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் செலுத்தப்படும் என்றும் அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications