கள்ளக்குறிச்சி வழக்கு.. சிபிஐ முக்கியமான வாதம்.. கண்ணுக்குட்டிக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை: கள்ளக்குறிச்சி நகரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது, அவற்றை கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களான கண்ணுக்குட்டி மற்றும் தாமோதரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னுக்குட்டி, தாமேதரனுக்கு சிபிஐ வைத்த முக்கிய வாதத்தால் ஜாமீன் கிடைக்கவில்லை
கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கருணாபுரத்தில் பலர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தனர்.பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட மலிவு விலை கள்ளச்சாராயத்தால் சுமார் 69 பேர் மரணம் அடைந்தனர். பலர் கண்பார்வை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.இந்த வழக்கில் தொடர்புடையவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அதன்படி கள்ளச்சாராயம் விற்பனை செய்து, அவற்றை கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மொத்தம் 21 பேர் கைது செய்யபட்டனர். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த இந்த வழக்கை சிபிஐ தான் இனி விசாரிக்க வேண்டும் என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், ஒரு கட்டத்தில் அதிரடியாக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும் சிபிஐ தான் கள்ளக்குறிச்சி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, பரமசிவம் ஆகியோர் 8 மாதங்களாக சிறையில் உள்ளார்கள். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் வாதிடுகையில், கள்ளக்குறிச்சி சாராய வழக்கில் முக்கிய நபர்களான தாமோதரன் மற்றும் கண்ணுக்குட்டிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் இவர்களிடம் இருந்து கள்ளச்சாராய மாதிரிகள் பறிமுதல் செய்யப்பட்டு இவர்கள் தான் விற்பனை செய்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் வாதிட்டார். மேலும் இவர்கள் மோசமான மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றும். எனவே, இவர்களுக்கு எந்த விதமான கருணையும் காட்டக்கூடாது என்றும், இவர்களுக்கு எதிராக 30 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வழக்கறிஞர் சீனிவாசன் வாதிட்டார்.
கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, பரமசிவம் ஆகிய மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 8 மாதங்களுக்கு மேல் இவர்கள் சிறையில் உள்ளார்கள். தாமோதரன் ஒரு மாற்றுத்திறனாளி. விஜயா ஒரு பெண். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் பிறப்பித்த உத்தரவில் , கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் இருவருக்கும் தற்போது ஜாமீன் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். பின்னர் இருவரின் மனுக்களை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவித்தனர். அதனையடுத்து இருவரின் மனுக்களை திரும்ப பெற அனுமதி அளித்த நீதிபதி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே வேளையில் பரமசிவம், விஜயா இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications