அதிமுக ஆட்டம் ஆரம்பம்.. சரியான சமயம் பார்த்து காத்திருந்த எடப்பாடி! கம்பேக் கள்ளக்குறிச்சி!
சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எதிர்க்கட்சி செய்ய வேண்டிய ஜனநாயகக் கடமையைச் சரியாகச் செய்ய தொடங்கி இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் படு தோல்வியடைந்த அதிமுகவுக்கு இந்தச் சம்பவம் சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பல தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
மக்களவை படுதோல்விக்குப் பிறகு அதிமுக மீண்டு வருமா? எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நீடிக்குமா? ஒருங்கிணைந்த அதிமுக என்ற சசிகலாவின் கனவு நிறைவேறுமா? எனப் பல கோணங்களில் சர்ச்சைகள் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய ஒரு ஆயுதமாகக் கையில் கிடைத்துள்ளது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள். 58 பேரின் உயிரை இதுவரை இந்தக் கள்ளச்சாராயம் குடித்துள்ளது.

இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசு மீதும் ஆளும் கட்சி அமைச்சர்கள் மீதும் பல புகார்கள் எழுந்துள்ளன. இந்தத் துயர சம்பவத்தைக் கண்டித்து அதிமுக தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ஒரே இடத்தில் 28 பேருக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டுள்ளது இதுவரை தமிழகம் வரலாறு காணாத சம்பவம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். தன்னை கைது செய்தாலும் அஞ்சப் போவதில்லை என்றும் அவர் சொல்லி இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று ஆளுநரைச் சந்தித்து சிபிஐ விசாரணை கேட்டு மனு அளித்துள்ளார்.
இதில் வசதியாக எடப்பாடி பழனிசாமி ஒரு விசயத்தை மறந்துவிட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடியில் 13 பேரை உயிருடன் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்றது. அது தற்செயல் அல்ல. கள்ளக்குறிச்சியில் நடந்தது விபத்து. திட்டமிட்ட படுகொலை அல்ல. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் திட்டமிட்டு காவல்துறை சுட்டுக் கொன்றது. அதை அவர் கண்டிக்கவில்லை.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பழனிசாமி, அந்தச் சம்பவத்தை டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று அதிகாரமாகப் பதிலளித்தார். ஒரு பொறுப்புள்ள முதலமைச்சரின் பதிலா இது என்று திமுக உட்பட எதிர்க்கட்சிகள் கண்டித்தன. ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமி இதுவரை தமிழ்நாடு பார்க்காத சம்பம் இது என்று கள்ளக்குறிச்சியைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
இதே அதிமுக ஆட்சியில் கும்பகோணம் மகாமகத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டதால் 60 உயிர்கள் பலியாகின. அதை ஒப்பிட்டு உடன்பிறப்புகள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றன.

முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வந்த அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்த சம்பவம் திமுகவின் ஆட்சியில் ஒரு கறையாக மாறியுள்ளது. பொதுவாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் ஆளும் அரசு அலர்ட் ஆக இருக்கும். உளவுத்துறையை உஷார் படுத்திக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வைக்கும். ஏனென்றால், கூட்டத்தொடர் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால், அது ஆளும் கட்சிக்கு தலைவலியாக மாறும்.
1949இல் இருந்து அரசியல் கட்சியாக உள்ள மிகப் பழமையான கட்சி திமுக. அது பல கோணங்களில் ஆளுமை மிக்க கட்சியாக இதற்கு முன்னர் சட்டப்பேரவையில் பங்களிப்பைச் செய்துள்ளது. அவ்வளவு பழமையான கட்சி கூட்டத்தொடரை முன்பாக வைத்துக் கொண்டு கோட்டை விட்டுள்ளது என்பது என்றுதான் பலர் அரசியல் வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றன.
கடந்த சட்டசபைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் வலுவான வெற்றியைப் பெற்றுள்ள திமுக, வெற்றி களிப்பில் கண் அயர்ந்து விட்டதோ என்றும் பலர் கேட்கிறார்கள். எப்போது தனக்கு ஒரு வாய்ப்பு வரும் எனக் காத்திருந்த அதிமுகவும் எட்டப்பாடி பழனிசாமியும் இந்த விவகாரத்தில் வேகம் எடுத்துள்ளனர்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு கள்ளக்குறிச்சி இதுவரை இரண்டு முறை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துவிட்டது. முன்பு மாணவி ஸ்ரீமதி. 3 நாள்கள் போராடியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று களத்தில் வேகம் காட்டினார். இப்போது மீண்டும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அவருக்கு அரசியல் ரீதியாக ஒரு மறு வாய்ப்பை அளித்துள்ளது.
குறிப்பாக அவர் கள்ளச்சாராயம் குடித்தவர்களைக் காப்பாற்றக் கொடுக்கப்படும் விஷ முறிவு மருந்தான Fomepizole அரசிடம் கையிருப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். கடைசியில் அந்தப் பெயரை மாற்றி மாற்றிக் குழப்பியதால், அந்த ஆயுதம் எடப்பாடிக்குப் பலனளிக்காமல் போனது. அவர் மாற்றி மாற்றி உச்சரித்த வீடியோவை திமுக ஐடி விங்க் சாதகமாக்கிக் கொண்டது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலைக் கண்காணிக்க 9 அமைச்சர்கள் போடப்பட்டுள்ளதாகத் தகவல். ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போய் விசாரிக்க 2 அமைச்சர்கள்தான் சென்றுள்ளனர். அதைவிட டாஸ்மாக் துறையைக் கையில் வைத்துள்ள அமைச்சர் போகவே இல்லை என்று பல ஊடகங்கள் கூறி வருகின்றன. இழப்பீடு வழங்க உதயநிதியை அனுப்பி வைத்துள்ளது திமுக அரசு.

ஆனால், டாஸ்மாக் அமைச்சர் மவுனமாக ஒதுங்கிக் கொண்டுள்ளார். முதலமைச்சர் ஏன் களத்திற்குப் போகவில்லை என்று அண்ணாமலை கேட்கிறார். இதே கேள்வியை எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் எழுப்பி இருக்கிறார். இப்போது அவரே கள்ளக்குறிச்சிக்குப் போகவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக அதிமுக சரியான எதிர்க்கட்சியாகத் தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது என்பதுதான் பொதுமக்களின் பரவலான குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை இந்த முறை எடப்பாடி பழனிசாமி தன் கட்சி மீது விழாமல் தடுத்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்ப்பை பதிய வைத்தது, கள்ளக்குறிச்சிக்கு நேரடியாகச் சென்றது, ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை வைத்தது என வேகம் காட்டி இருக்கிறார். அதில் குறை இல்லை. ஆனால், பொள்ளாச்சி, தூத்துக்குடி சம்பவங்களில் திமுக ஸ்கோர் செய்த அளவுக்கு அவரால் செய்ய முடியவில்லை என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.












Click it and Unblock the Notifications