அமைச்சரே திமுக அரசு பொற்காலமா?.. பட்ஜெட், மானியக் கோரிக்கைகளில் காட்டுங்கள்.. கமல்ஹாசன்!
சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி 'அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர்' வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலையளிக்கும் விதமாக உள்ளன.

நீண்ட காலம்
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் பணியாளர்களின் குரலுக்குத் தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிப்பதுடன் அனைத்து காலிப்பணியிடங்களையும் நேர்மையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.

கண்ணியம்
அரசுப் போக்குவரத்துப் பணியாளர்களுக்குக் கண்ணியமான பணிச்சூழலை உறுதி செய்வதுடன் ஊதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகள் அனைத்தும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். பணியிட மாற்றம், பதவி உயர்வு, ஓவர் டூட்டி என அனைத்திலும் நீடிக்கும் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும். அனைத்துத் தொழிற்சங்கங்களும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும்.

நிலுவை
7 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பஞ்சப்படி உடனடியாக வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான மருத்துவக் காப்பீடு திட்டம், தரமான கேண்டீன், வசதியான ஓய்வெடுக்கும் அறைகள், உடல் நலத்தையும் உள்ள ஆரோக்கியத்தையும் பேணுவதற்கான பயிற்சிகளை அளித்தல் ஆகியவையும் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்கள்
திமுக ஆட்சி போக்குவரத்துத் தொழிலாளர்களின் பொற்காலமாக அமையும் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன். அதை செயலில் காட்டும் வகையில் நடைபெற இருக்கும் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை கூட்டத்தொடரில் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications