திமுக, அதிமுகவை எப்படி பார்க்க வேண்டும்? எந்த கட்சியுடன் கூட்டணி? சுவாரஸ்யமான கேள்விக்கு கமல் பதில்
சென்னை: அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன், அவர்களை பரம எதிரிகளாகவும் பார்க்க மாட்டேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது தொண்டர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
அவரிடம் தமிழகத்தில் நேர்மையான அரசியலை செய்ய முடியுமா என தொண்டர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதில் அளிக்கையில் நேர்மை அரசியலில் இருக்கும் போது மட்டும்தான் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர முடியும். ஏனென்றால் அரசியலில் நேர்மை என்பது எந்த காலத்திலும் இருந்தது கிடையாது.
நடுமுள்
நேர்மையானவர்கள் வந்துதான் அதை நேர்மையாக மாற்றினார்கள். ஊழலற்ற இடத்தில்தான் நான் அரசியல் செய்வேன் என்றால் அரசியலை யாருமே செய்ய முடியாது. ஆனால் இது நடு முள்ளாக நாம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என பதிலளித்தார். அது போல் மது ஒழிப்பில் தங்களின் நிலைப்பாடு என்ன என கேட்கப்பட்டது.
விமர்சனம்
அதற்கு கமல் பதிலளிக்கையில் என்னுடைய விமர்சனம் அரசை பற்றியது, யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய அந்த வியாபாரத்தை அரசு எதற்கு எடுத்து நடத்த வேண்டும். மது ஒழிப்பு என்பது மது குடிப்பவர்கள் இருக்கும் வரை செய்யவே முடியாது என்றெல்லாம் சொல்லமாட்டேன். செய்ய முயற்சி செய்ய வேண்டும். இதை மக்கள் நீதி மய்யம் செய்ய முனைகிறது. எனவே நிச்சயம் மதுவை ஒழிப்போம் என்றார்.
அதிமுக, திமுக
தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான அதிமுக, திமுக உள்ளன. அவற்றை தாண்டி நீங்கள் வெற்றி பெற முடியுமா? அல்லது நீங்கள் அவர்களுடன் கூட்டணிக்கு போய் விடுவீர்களா என்ற கேள்வியை தொண்டர்கள் முன் வைத்தனர். அதற்கு அவர் கூறுகையில் அரசியல் கட்சியை நாம் சிந்தனையின் பிரதிபலிப்பாக பார்க்க வேண்டுமே தவிர, பரம விரோதிகளாக ஏன் பார்க்க வேண்டும்?
கூட்டணி சேர்ந்தால்தான்
மக்கள் நீதி மய்யம் என்பதே கூட்டணிதான். வெவ்வேறு துறையில் இருந்தவர்கள், வெவ்வேறு கட்சியில் இருந்தவங்க கூட விலகி வந்து இருக்கிறார்கள். அதிமுக, திமுகவுடன் கூட்டணியெல்லாம் இல்லை. இவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் என்னவாகும் என யோசித்து பார்த்துவிட்டுதான் நான் தனிக்கட்சியையே தொடங்கினேன்.
கடவுள்
கட்சியில் யாரும் தங்களத்தை மதத்தை பின்பற்றி கடவுளை வழிபட எந்த தடையும் இல்லை. நான் பகுத்தறிவாளன், வழிபாடு செய்யுமாறு என்னை கூறாதீர்கள். கொள்கை தவறி செயல்பட்டால் கட்சியை கலைக்கவும் தயங்க மாட்டேன் என கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்தார்.