என் நேசத்திற்குரிய கோவை மக்களே ரெடியாக இருங்கள்.. நாளை சந்திப்போம்.. கமல் ட்வீட்
சென்னை: கோவை மக்களைச் சந்திப்பதற்காக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நாளை கோயம்புத்தூர் செல்கிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக சில நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும் நாளை கோயம்புத்தூர் வருகிறேன். இரண்டு நாட்கள் அங்கிருப்பேன். சந்திப்போம் உறவுகளே என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. அப்போது அவர் எம்ஜிஆர் போட்டியிட்ட செயிண்ட் தாமஸ் மவுண்ட் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவரோ கோவை தெற்கு பகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் டாக்டர் மகேந்திரனுக்கு அதிக செல்வாக்கு இருந்ததால் அந்த தொகுதியில் அவர் போட்டியிட்டதாக சொல்லப்பட்டது.
அதற்கேற்ப அவர் கோவை தெற்கு பகுதியில் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள், விளையாட்டு மையங்களில் பயிற்சி பெறுவோர் உள்ளிட்டோரிடம் கமல் வாக்கு சேகரித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் கடந்த மே 2 ஆம் தேதி வெளியான நிலையில் ஆரம்பத்திலிருந்து அவரும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனும் மாறி மாறி முன்னிலை வகித்தார். இவர்களது வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடித்தது.
கடைசியில் கமல்ஹாசன் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில சுற்றுகளில் வானதி அதிக வாக்குகளை பெற்று 1,235 வாக்குகள் வித்தியாசத்தில் கமலை வென்றார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் கமல்ஹாசன்தான் அதிக வாக்குகளை எடுத்திருந்தார். அவர் மொத்தம் 51,481 வாக்குகளை எடுத்தார்.












Click it and Unblock the Notifications