கமல் சொன்ன "நல்லவர்" யாருப்பா?.. ஒரு வேளை கிரானைட் கொள்ளையர்கள் வாயில் மண்ணைப் போட்டவரா இருக்குமோ?
சென்னை: நல்லவர்களுடன் கூட்டணி என கமல்ஹாசன் அறிவித்ததில் இருந்தே அவர் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வந்தாலும் வருகிறது ஏதோ ஊர்த் திருவிழா போல் தமிழகமே ஜேஜேனு கூட்டமாகவே இருக்கிறது. ஆங்காங்கே அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களையும் தேர்தல் பிரச்சாரங்களையும் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக, திமுக கூட்டணிகள் ஓரளவுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் போது இருந்த நிலையே நீடிப்பது போல் உள்ளது. என்ன! அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிகவின் நிலைப்பாடு இடஒதுக்கீடு பிரச்சினை, தொகுதி பங்கீட்டின் அடிப்படையிலேயே தெரியவரும்.

நல்லவர்களுடன் கூட்டணி
சீமானின் நாம் தமிழர் கட்சி இத்தனை நாட்களாக தனித்தே போட்டியிட்டு வருகிறது. ஆனால் தனித்து போட்டி என மக்கள் நீதி மய்யம் இதுவரை அறிவிக்காததால் அவர் எந்த கட்சியுடன் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே கூட்டணி குறித்து கமலிடம் கேள்வி எழுப்பிய போது நிச்சயம் நல்லவர்களுடன் கூட்டணி என்றே அறிவித்து வந்துள்ளார்.

கமல்ஹாசன்
மேலும் கடந்த நவம்பர் மாதம் கமல்ஹாசன் கூறுகையில் சகாயம் போன்ற நல்லவர்களுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். சகாயமும் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவர் மக்கள் பாதை இயக்கம் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். டிசம்பரில் விருப்ப ஓய்வு பெற்ற அவர், வருங்காலத்தில் மக்கள் பாதை இயக்கம் அரசியலில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார்.

சடலங்கள்
மேலும் கமலுடன் கைகோர்ப்பதற்காகவே அவர் விருப்ப ஓய்வு பெற்றிருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. மதுரை கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அப்போது அங்கு ஆய்வுக்கு சென்ற போது இருள் சூழ்ந்துவிட்டதால் நாம் வீட்டுக்குள் சென்றுவிட்டால், இரவோடு இரவாக ஒரு தடயம் கூட இல்லாத அளவுக்கு சடலங்களை தோண்டி எடுத்துவிடுவார்கள் என்று நினைத்ததால் அந்த இரவு முழுவதும் சகாயம் சுடுகாட்டிலேயே தங்கியிருந்தார்.

துடைப்பம்
அந்த அளவுக்கு தனது பணியில் நேர்மையை கடைப்பிடித்தவர் சகாயம். இந்த சம்பவம் அவரது நேர்மைக்கு சின்ன ஒரு சாம்பிளாகும். எனவே கமல்ஹாசன் சொன்ன அந்த நல்லவர் சகாயமாக இருக்கலாம் என்ற ஒரு கணிப்பு உள்ளது. ஏனெனில் ஊழல் இல்லாத சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்பதே இருவரது கொள்கையாக இருக்கிறது. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலுடன் கமலுக்கு நல்ல நட்பு இருக்கிறது. அவரும் ஊழலை துடைப்பத்தை கொண்டு துடைக்க வேண்டும் என்பதை போல் தனது ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பத்தையே சின்னமாக வைத்துள்ளார்.

சகாயம்
எனவே கமல்ஹாசன் சகாயத்தின் மக்கள் பாதை அமைப்பு மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சியும் கடந்த சில தினங்களாக தேர்தலை சந்தித்து தமிழகத்தில் ஒரு அடையாளத்தை பெற்றுள்ளது. எனவே இவர்கள் ஒன்றிணைய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்கிறார்கள். கமல்ஹாசன் காங்கிரஸுடனோ திமுக, அதிமுகவுடனோ கூட்டணி செல்லவே மாட்டார் என அடித்துச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தோர். அவ்வாறு சென்றால் அவரது கொள்கைகள் நீர்த்து போய்விடும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications