Kamal Hassan apology: “அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது..” கன்னட அமைப்பினருக்கு செம பதிலடி தந்த கமல்ஹாசன்
சென்னை: தமிழிலிருந்துதான் கன்னடம் உள்ளிட்ட மொழிகள் உருவாகின என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருந்தார். இக்கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இதற்காக மன்னிப்பு கோர முடியாது என கமல் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் 'தக் லைஃப்' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் சென்னையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசிய கமல்ஹாசன்,

"ராஜ்குமாரின் குடும்பம் கர்நாடகாவில் இருக்கும் என்னுடைய குடும்பம். எனவேதான் அவர் இங்கு வந்திருக்கிறார். ஆகவேதான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது உயிரே, உறவே, தமிழே என்று ஆரம்பித்தேன். தமிழிலிருந்துதான் கன்னடம் தோன்றியது. அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்" என்று கேட்க சிவராஜ்குமாரும் ஆமோதித்து தலையை அசைத்தார். இக்கருத்துதான் கர்நாடகாவில் பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில் இன்று நடந்த 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் பேசியிருந்த கமல்ஹாசன், "கர்நாடகத்திலிருந்து விமர்சிப்பவர்களையும் என் குடும்பத்தினராக கருதுகிறேன். நான் கூறிய கருத்துக்களை எனது பக்கம் இருந்து பார்த்தால் சரியாக இருக்கும். அதுவே உங்கள் பக்கம் இருந்து பார்த்தால் தவறாகத்தான் தெரியும். அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது" என்று, தமிழிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்கிற கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறியுள்ளார்.
இதனிடையே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், "நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நான் அன்பினால் அப்படி கூறினேன். நிறைய வரலாற்றாசிரியர்கள் எனக்கு மொழி பற்றிய வரலாற்றைக் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். அரசியல்வாதிகள் மொழிப்பிரச்சனை குறித்து பேச தகுதியற்றவர்கள், நான் உட்பட. எனவே அன்பினால் பேசிய வார்த்தைகளுக்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.
தமிழ்நாடு மொழி விஷயத்தில் நீண்ட வரலாற்றை கொண்டிருக்கிறது. ஒரு மேனன், ஒரு ரெட்டி, ஒரு கன்னட ஐயங்கார் முதல்வராக கொண்டிருந்த மாநிலம் இது. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்னை வந்தபோது கர்நாடகா எனக்கு ஆதரவாக நின்றது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இக்கருத்துக்காக, கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்பட அம்மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். "நடிகர் கமலுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியாது. எங்கள் மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு தெரியவில்லை. வரலாறு தெரியாமல் அவர் பேசுகிறார். இப்படி எதுவும் தெரியாமல் பேசக்கூடாது" என சித்தராமையா விமர்சித்திருந்தார்.
அதேபோல, "கமல்ஹாசன் 6.5 கோடி கன்னட மக்களின் சுயமரியாதையை அவமதித்துவிட்டார். அவரது பேச்சு அநாகரிகமாகவும், ஆணவத்தின் உச்சமாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல், மத உணர்வுகளை புன்படுத்துவதாகவும் இருக்கிறது. இதற்காக கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்" என கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications