நாங்க 4000 கொடுப்பதா இருந்தோம்.. அதில் ஆயிரத்தை உருவி திமுக காப்பி.. கமல் பொளேர்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளதாக குற்றம்சாட்டிய நிலையில் திமுகவால் காப்பி மட்டுமே அடிக்க முடியும். நாங்கள்தான் அந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை கொடுப்போம் என கமல்ஹாசன் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். இது மிகப் பெரிய அறிவிப்பாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் திருச்சி சிறுகனூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை அறிவித்திருந்தார்.
2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம்.. ஸ்டாலின் என டைம்ஸ் நவ் சர்வேயில் மக்கள் பளீச்!
அன்றாட தேவை
அப்போது அவர் கூறுகையில் ரேஷன் பொருட்கள் வாங்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு ஏழை எளிய மக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. குழந்தைகளின் அன்றாட தேவையையாவது பூர்த்தி செய்ய இது உதவும் என்கிறார்கள் பெண்கள்.
பெண்கள் தின விழா
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று பெண்கள் தின விழா நடைபெற்றது. அதில் மக்கள் நீதி மய்யம் அறிவித்த திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 4000 கொடுக்கும் திட்டம் வைத்திருந்தோம்.
காப்பி அடிப்பது
நாங்கள் நினைத்த 4000-த்தில் 3 ஆயிரத்தை விட்டுவிட்டு ரூ 1000 மட்டும் உருவி கொடுப்போம் என்கிறார்கள். காப்பி அடிப்பது யாராக இருந்தாலும், முதலில் கூறியது நாங்கள்தான். உங்களால் காப்பி மட்டும்தான் அடிக்க முடியும். நாங்கள் செயல்படுத்துவோம். என்னிடம் உள்ள நல்லதை காப்பி அடிப்பதிலும் நல்லத்தனம் வேண்டும்.
காப்பி
பெண்களின் நலன் பற்றிய நிறைய திட்டங்கள் உள்ளன. அதனை அறிவித்தால் கூட காப்பி அடிப்பார்கள் போல, தனித்து வாழும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும். எந்த பணியை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும். புலியை அடித்து துரத்திய வரலாறு கொண்ட பெண்கள் ஓட்டுக்கு பணம் தருவோரையும் அடித்து துரத்த வேண்டும். முறைகேடு செய்யாத நல்ல அரசு அமைந்தால் தமிழகத்தை சிங்கப்பூர் போல் மாற்றிடலாம் என்றார் கமல்ஹாசன்.