நான் சுட்டிக் காட்டிய பிறகுதான் பொள்ளாச்சி வழக்கில் மேலும் 3 பேர் கைது.. கமல்ஹாசன்
சென்னை: நான் சுட்டிக் காட்டிய பின்னரே பொள்ளாச்சி வழக்கில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற பெயரில் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறார். நேற்று உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கமல்ஹாசனை பார்க்க காத்திருந்தனர். அப்போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நடத்தி வந்தனர்.
மகாலிங்கபுரம்
பொள்ளாச்சியில் திருவள்ளுவர் திடலிலும் மகாலிங்கபுரத்திலும் கொட்டும் மழையிலும் திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் கமல்ஹாசன் உரையாற்றினர். அவர் கூறுகையில் உங்கள் அன்பிற்கு நன்றி. தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வரும் வழியெல்லாம் அன்பில் நீந்தி வருவதற்கு தாமதம் ஆனது.
மக்கள் நீதி மய்யம்
பொள்ளாச்சியுடன் எனக்கு உள்ள தொடர்பு, நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து பாலிடெக்னிக் காலேஜில் தங்கி நாடகங்களை நடத்தினோம். நடிகரான பிறகு தேவர்மகன் போன்ற படங்களை இங்கே தங்கியிருந்து நான் நடித்திருக்கிறேன். ஓரளவுக்கு உங்கள் ஊர்காரர்தான் நான். மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்கள் ஒரே பள்ளியில் படித்தவர்கள் அல்ல.
குற்றம்
நாங்கள் படித்த பாடம் கசப்பானது. அதனால் பாடப்பிரிவை மாற்ற வந்தேன். பொள்ளாச்சியில் உள்ள பரம்பிகுளம் திட்டம் என்ன பாடுபட்டு அந்த திட்டம் வந்தது என புதிய தலைமுறையினருக்கு தெரியாது. பொள்ளாச்சி சந்தை என்று கால காலமாக நாம் போற்றி வந்த சந்தை இன்று குற்றத்தின் சந்தையாக மாறிவிட்டது.
பாலியல் குற்றம்
பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் நடந்து 700 நாட்கள் கடந்து விட்டன. 600 ஆவது நாளில் மீண்டும் நியாபகப்படுத்தியவுடன் மீண்டும் புலனாய்வு தொடங்கியது. சில கைதுகள் நடந்தன. ஆளும் கட்சி பிரமுகர் ஒருவருக்கு தொடர்புண்டு என்பதை ஊடகங்கள் உறுதிப்படுத்தின. இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்புவது வியப்பிற்குரியது அல்ல.
தடை
செழிப்பான பூமியான பொள்ளாச்சியில் விவசாயம் செய்ய முடியாவிட்டால் பரமக்குடிக்காரர்களின் கதி என்ன என்ற கோபம் என்னை அரசியல்வாதியாகிவிட்டது. சமூக கோபத்தினால்தான் அரசியலுக்கு வந்தேன். என் படத்தை தடை செய்ததற்காக நான் வரவில்லை. விவசாயத்திற்கு தேவையான குளிர்பதன கிடங்குகள் கண்டிப்பாக வலுப்படுத்தப்படும். பொள்ளாச்சியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றார் கமல்ஹாசன்.