கமல்ஹாசனால் உடைகிறதா திமுக-காங்கிரஸ் கூட்டணி? அதிமுக, பாஜக குஷி
Recommended Video

சென்னை: திமுகவிடமிருந்து காங்கிரஸை பிரித்து கூட்டணியை உடைக்கும் முயற்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாதி அளவுக்கு வெற்றி பெற்றுவிட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார் கமல்ஹாசன். பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கமல்.
கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்ற போது தமிழக அரசியல் தலைவர்களில் கமல்ஹாசன் மட்டும் அதில் பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

சந்திப்புகள்
இதன்பிறகு, 2வது முறையாக கடந்த ஜூன் 20ம் தேதி ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதோடு, அக்கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புகளை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இந்த சந்திப்புகளின் பின்னணியில் கமல்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

திருநாவுக்கரசர் பேட்டி
இதை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், நேற்று அளித்த பேட்டியில், காங்கிரசுடன் இணங்கி செல்ல கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார். ஆனால், திமுகவுடன் கூட்டணி வைக்க கமல் தயாரில்லை என்று மறைமுகமாக கூறிவிட்டார். இங்குதான் புது ட்விஸ்ட் உள்ளது.

லோக்சபா தேர்தல்
ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில்தான் திமுக உள்ளது. ஆனால் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் விரும்பும் அளவுக்கான தொகுதிகளை திமுக விட்டுத்தராதபட்சத்தில், கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. அப்போது திமுகவை கழற்றிவிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனவேதான் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறும் கமல்ஹாசனை தங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார் திருநாவுக்கரசர்.

திமுக-காங்கிரஸ் விரிசல்
கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தது. அக்கட்சி போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் தோல்வியை தழுவியது. காங்கிரசுக்கு அதிக இடங்களை வழங்கி அவற்றை அது வீணடித்ததுதான் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போக முக்கிய காரணமாக அமைந்தது. இதை திமுக பெரிய தலைவர்கள் சுட்டிக்காட்டியதால், காங்கிரஸ் தலைமைக்கு அப்போதிருந்தே திமுக மீது அதிருப்தி நிலவுகிறது. திருநாவுக்கரசர் தலைமையிலான காங்கிரசுடன் திமுக தலைமை ஒட்டுதல் இல்லாமல் உள்ளது. இந்த பிரச்சினைகளை கமலை வைத்து தீர்த்துக்கொள்ள காங். தலைமை திட்டமிடுகிறது. கமல்ஹாசனுக்கும், தேர்தலை சந்திக்க பெரிய துணை ஒன்று தேவை என்பதால், இக்கூட்டணியை விரும்புகிறாராம்.

பின்னணி
திமுகவை பலவீனப்படுத்தும் டெல்லியிலுள்ள சிலரின் முயற்சி கமலுக்கு பின்னணியில் உள்ளதாக திமுக தலைவர்களுக்கு சந்தேகம் உள்ளது. கமல்ஹாசன் அவ்வப்போது சுற்றுப் பயணம் செய்து மக்கள் கூட்டத்தை கூட்டி காங்கிரஸ் தலைமையை கவர்ந்து வருகிறார். கமல் கருத்துக்களுக்கு பாஜக தலைவர்கள் பதில் கொடுத்து அவரின் முக்கியத்துவத்தை அதிகரித்து வருகிறார்கள். எனவே இதெல்லாம் ஒரு கூட்டு சதி என்று திமுகவிலுள்ள சில தலைவர்கள் சந்தேகிப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன. சமீபத்தில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ், திமுக கூட்டணி உடையும் என்று கமல்ஹாசன் கூறியதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் அவர்கள்.












Click it and Unblock the Notifications