இந்து மதம் பற்றிய வரலாறு தெரியாமல் பேசுகிறார் கமல்ஹாசன்... இல.கணேசன் காட்டம்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வரலாறு தெரியாமல் பேசுவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்து தீவிரவாதி என்ற சர்ச்சை கருத்தை தொடர்ந்து, 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ இந்து என்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்குமுன் ஆள வந்தாராலோ, இந்து என நாமகரணம் செய்யப்பட்டோம் என இந்து என்ற சொல்லுக்கு கமல்ஹாசன் விளக்கமளித்தார்.
மேலும், நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை. என்றும் நாம் "இந்தியர்" என்கிற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஷ்ணுபுராணத்தில் ஒரு ஸ்லோகம் 'இமயம் தொடங்கி இந்து மகா சமுத்திரம் வரை பரந்து விரிந்த இந்த நிலப்பரப்பு இந்துஸ்தானம்' என்று விவரிக்கிறது. இந்துஸ்தான் என்பது மட்டுமல்ல. இந்த நாட்டின் எல்லையையும் குறிப்பிடுகிறது. இது ஆண்டவனால் உருவாக்கப்பட்ட தேசம் என்றார்.
இந்து மதம் என்று நமது சவுகரியத்துக்காக நாம் வைத்துக்கொண்ட பெயர்தான் இது. மாற்றான் தரவில்லை. அவன் வருவதற்கு முன்பே நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட பெயர்தான் இந்து என்றும் பதிலளித்தார்.
இந்து என்று சொல்வதற்கு இங்குள்ளவர்கள் வெட்கப்படலாம். ஆனால், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இன்றும் 'மோடி பிரைம் மினிஸ்டர் அப் இந்துஸ்தான்' என்று தான் சொல்கிறார்கள் எனவும் பேசினார். கமல்ஹாசன் எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது என்றும் கூறினார்.