திமுக - மநீம.. உறவு பாலம் திடீரென அறுந்தது ஏன்.. கமலின் திடீர் சீற்றத்தின் பின்னணி என்ன?
திமுக தலைவர் ஸ்டாலினை கமல்ஹாசன் பகிரங்கமாக விமர்சனம் செய்திருக்கிறார்.
Recommended Video
சென்னை: திமுக-மக்கள் நீதி மய்யம் இரண்டு கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. குறிப்பாக இரு கட்சி தலைவர்களின் ஆழ்மனதில் என்னதான் ஒளிந்திருக்கிறது என்றும் புரியவில்லை.
கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கமல் அதிகமாக விமர்சித்து வந்தது அதிமுகவைதான். மத்திய ஆட்சியை பற்றி எதுவுமே விமர்சிக்காமல் இருக்கிறாரே கமல் என்றுகூட வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு அதிமுகவையே ரவுண்டு கட்டி விமர்சனம் செய்தார்.
அதேபோல கமல் ஒரு திமுக ஆதரவாளரோ என்று நினைக்கும் அளவுக்குதான் அதிமுகவை விமர்சித்து ட்வீட்களை போட்டு வந்தார். ஆனால் இது கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. கமல் வருவார் என்று திமுக நினைத்ததோ, அல்லது தன்னை கூப்பிட்டு கொள்வார்கள் என்று கமல் நினைத்தாரோ தெரியவில்லை..
முற்றுப்புள்ளி
சில மாதங்கள் இந்த இழுபறி நிலை நீடித்தது. இறுதியாக கறை படிந்தவர்களுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லி முடிக்கவும் நிலவி வந்த சந்தேகங்களுக்கு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கமல் திமுகவில் இணைய வாய்ப்பில்லை என்பது வெட்ட வெளிச்சமானது. கமல் அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை, "திமுக ஒரு ஊழல் பொதி மூட்டை. அவற்றை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும் என்று கமல் ஒரு கேள்வியை கேட்கவும்தான் இந்த பிரச்சனை ஆரம்பமானது.
பதிலடி
இதற்கு முரசொலியில் தலையங்கமாக பதிலடி தந்தது. அதோடு இது முடியும் என்று பார்த்தால், திரும்பவும் கமல் ஆரம்பித்திருக்கிறார். "சட்டையை கிழித்து கொண்டு வரமாட்டேன்" என்று கமல் சொல்லியிருக்கிறார். மற்றொன்று, எங்களை பார்த்து கிராம சபையை ஏன் காப்பியடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதில், சட்டசபை சம்பவம் எப்போதோ நடந்து முடிந்த விவகாரம். அதை எதற்கு சம்பந்தமே இல்லாமல் இப்போது கமல் பேச வேண்டும்?
சட்டசபை விவகாரம்
அதிமுகவையே விமர்சனம் செய்து வந்த கமல், எதற்காக திமுக பக்கம் இப்போது திரும்ப வேண்டும்? கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆக போகிறது, ஊழல் செய்த கட்சி திமுகதான் இப்போதுதான் கமலுக்கு தெரிகிறதா? அல்லது சட்டசபை சட்டை கிழிந்த விவகாரம் இப்போதுதான் நினைவுக்கு வருகிறதா என தெரியவில்லை.
கிராம வளர்ச்சி
அடுத்ததாக கிராம சபையை பார்த்து ஸ்டாலின் ஏன் காப்பி அடிக்கிறார் என்று கமல் கேட்டுள்ளார். கமலின் இந்த வாதம் ஏற்கக்கூடியதே. நியாயமானதும்கூட. மறைந்து போன கிராம சபையை மக்களிடம் கொண்டு செல்ல முற்பட்டதில் கமலுக்கு நிறைய பங்கு இருக்கிறது. இருக்கும் அரசியல்வாதிகளிலேயே கிராமங்கள் பக்கம் தன் பார்வையை செலுத்தி இளைஞர்களை திசை திருப்பியவர் கமல்தான். கிராம மக்களின் நலனை முன்னிறுத்தியே அரசியல் செய்வதுததான் கமலின் பிளஸ் பாயிண்ட்.
கமலின் வளர்ச்சி
குறிப்பாக கஜா புயல் நிவாரணம், கிராமங்களில் நேரடி கள ஆய்வு, விவசாயிகளை அரவணைத்தது, உண்ணாவிரதம் இருந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னது, கிராம மக்கள் பிரச்சனையை களைய முற்பட்டு கொண்டிருப்பது என்ற கிராமத்தையே சுற்றி சுற்றி அக்கறை செலுத்தியதில்தான் கமலின் வளர்ச்சி தெளிவாக தென்பட்டது.
நியாயம் இல்லை
அதனால்தான் கமலின் ரூட்டை இப்போது ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார். ஏராளமான கிராமங்கள் இன்னும் தமிழகத்தில் இருக்கும்போது, இப்போது ஏன் ஸ்டாலின் கிராமங்களை நோக்கி நகர வேண்டும்? அரசியலில் சீனியரான ஸ்டாலின் ஜூனியரான கமலை பார்த்து பின்பற்றுவது நியாயம் இல்லைதான்.
பின்புலம்?
ஆக மொத்தம் இரு தரப்பு தலைவர்களுமே கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு அரசியலை நடத்தவில்லை. ஸ்டாலின் மீது விமர்சனம் செய்தால் பாஜகவுக்கு பின்புலமாக இருந்து கமல் செயல்படுகிறார் என்று பேச்சு எழுகிறது. கமல் மீது ஸ்டாலின் விமர்சனம் செய்தால், கூட்டணி வைக்காத கோபத்தில்தான் இப்படி பேசுகிறார் என்ற பேச்சு எழுகிறது.
நட்பு அறுபடுகிறதா?
அதனால் எப்படி பார்த்தாலும், இவ்வளவு நாள் இல்லாமல் இப்படி இருவருமே விமர்சனம் செய்து கொள்வது வித்தியாசமாக இருகிறது.. ஒரு வேளை இரு கட்சிகளுக்கும் இடையே உள்ளூர இருந்து வந்த நட்பை அறுப்பது போல ஏதாவது நடந்திருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.