காரண பெயராக்கிய பெரியவர் நல்லகண்ணு அய்யாவுக்கு வாழ்த்துகள்.. கமல்ஹாசன் புகழாரம்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். "காரணப் பெயராக்கிய" பெரியவர் நல்லக்கண்ணு அய்யாவிற்கு வாழ்த்துக்கள் என்று புகழாரத்துடன் கமல் தன் வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.
பொதுவாக கமல் மார்க்சிய சிந்தனையில் கட்டுண்டவர். தன்னை சுற்றிலும் அறிவுஜீவுகளை ஒரு பக்கம் வைத்து கொண்டாலும், கம்யூனிஸ வாதிகளிடம் தனிப்பட்ட மரியாதையை காட்டி வருபவர்.
நடிக்கும்போதிருந்தே தன்னுடைய கருத்துக்களிலும் இதே சித்தாந்ததை அடிக்கடி வலியுறுத்தியும் வந்தவர். கட்சி ஆரம்பிக்கும்முன் கேரள முதல்வர் பினராயி விஜயனை பலமுறை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றவர் கமல். கட்சி பெயர் அறிவிக்கும் விழாவிலும் மேடைகளை ஆக்கிரமித்தது பெரும்பாலும் கம்யூனிசவாதிகள்தான்.
ஆதர்ஸ தலைவர்
இதேபோல, கட்சி துவங்குவதற்கு முன்பு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணுவை கமல் நேரில் சந்தித்து பேசினார். ஆதர்ஸ தலைவர்களின் வரிசையில் நல்லகண்ணுவை தன் மனதில் வைத்திருப்பதே அதற்கு காரணம்.
நேர்மையானவர்
கட்சி ஆரம்பிக்கும் சமயத்தில், எதற்காக நல்லகண்ணுவை நேரில் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, "மக்களுக்காக சேவை செய்து, நேர்மையானவர் என்பதால் அவரை சந்தித்தாகவும், நல்லக்கண்ணு என்றில்லை, மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை சந்தித்து மதிப்பளிப்பேன்" என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
வாழ்த்துக்கள்
அது மட்டுமில்லை, மதுரையில் நடைபெறும் தன் புது கட்சியின் பொது கூட்டத்துக்கு நல்லக்கண்ணுவையும் அழைத்து விட்டு சென்றார் கமல். இன்றுவரை இந்த தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்தும் வருகிறார். இந்நிலையில் இன்று நல்லகண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல். இன்று நல்லகண்ணுவின் 94-வது பிறந்த நாள். இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை உரித்தாக்கி உள்ளார்.
|
அய்யாவிற்கு வாழ்த்துக்கள்
அதில், "இவருக்கு பெயர் இட்டது பெற்றோரே எனினும் தான் வாழ்ந்த விதத்தால், தன் பெயரை 'காரணப் பெயராக்கிய' பெரியவர் திரு. நல்லக்கண்ணு அய்யாவிற்கு இன்று பிறந்த நாள். நல்லவரையும் நல்லவற்றையும் வாழ்த்துவோம் மனதார..." என்று கமல் பதிவிட்டுள்ளார்.