"ஆட்டத்தை" ஆரம்பிச்ச அண்ணாத்தே.. வச்சு செய்ய போகும் கமல்.. சிக்க போவது யாரு?.. கிலியில் கட்சிகள்!
பிக்பாஸ் நிகழ்ச்சி கமலுக்கு அரசியல் பிரச்சாரத்துக்கு தூண்டுகோலாக இருக்கும் என்கிறார்கள்
சென்னை: இந்த நேரத்தில், அதிமுகவும் சரி, திமுகவும் சரி, இப்படி எந்த கட்சியாலும் கமலை ஒன்றுமே செய்ய முடியாது.. பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய கருத்தை எடுத்து வைத்தாலும் அதை தடுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாது என்ற நிலைமை திராவிட கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.. பிக்பாஸ் மூலம் மறுபடியும் தன்னுடைய அரசியல் ஆட்டத்தை மறைமுகமாக ஆரம்பித்துள்ளார் கமல்!
லாக்டவுன் என்றாலும் கமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டே பல அரசியல் விஷயங்களை பேசி கொண்டிருந்தார்.. ட்வீட்களை போட்டு மத்திய, மாநில அரசுகளை கேள்விகளாக எழுப்பி கொண்டிருந்தார்.. தொற்று குறித்த விழிப்புணர்வுகளையும் அவ்வப்போது சொல்லி கொண்டே இருந்தார்.
இந்த சமயத்தில் பிக்பாஸ் புரொமோ வெளியானது.. "தப்புன்னா தட்டி கேட்பேன், நல்லதுனா தட்டி கொடுப்பேன்" என்று கமல் ஒரு பஞ்ச் வைத்தார்.. அந்த புள்ளியில் இருந்தே பரபரப்பு தொடங்கிவிட்டது.
சனம் ஷெட்டி புகார்.. பிக்பாஸ் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு.. கைது செய்யப்படுவாரா?
அரசியல்
அதிமுக, திமுக உட்பட கிட்டத்தட்ட எல்லாருமே தேர்தல் வியூகங்களில் இறங்கிவிட்டனர்.. கூட்டணி குறித்த பேச்சும் ஆரம்பமாகிவிட்டது.. ஆனால் மநீம மட்டும் சத்தமே இல்லாமல் இருந்தது.. நடந்து முடிந்த சில தேர்தல்களில் மநீம போட்டியிடாததால், இந்த முறை அக்கட்சியின் எதிர்பார்ப்பு கூடியது.
3வது அணி?
அதுமட்டுமில்லை, அதிமுக, திமுக இல்லாமல் மாற்று என்றால், கமல் ஒருவேளை 3வது அணியை உருவாக்குவாரா? கமல் தலைமையில் அந்த 3வது அணி இருக்குமோ? கம்யூனிஸ்ட், விசிக, ரஜினி என எல்லோருமே கமலின் தலைமையில் அணி திரள்வார்களா? என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.
கலக்கல்
இந்த சமயத்தில்தான், பிக்பாஸ் சீசன் தொடங்கி இருக்கிறது.. மற்ற மாநிலங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனால் கமல் போல யாரும் இப்படி கலக்கலுடன், தில்லுடன், அரசியல் பாயிண்ட்டுகளை பேசி நடத்துவதில்லை.. கமல் கட்சி ஆரம்பித்ததுமே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி பேசுவது அவரது மய்ய உறுப்பினர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.. தற்போதும் பெற்று வருகிறது.
பிரச்சாரம்
அதேசமயம், ஒரு டிவி ஷோ-வை தன்னுடைய அரசியல் பிரச்சாரத்துக்கு உபயோகத்துப்படுத்துவதா? என்ற எதிர்தரப்பு விமர்சனங்களும் எழவே செய்கின்றன.. இருந்தாலும், இந்த சீசன்வரை கமல், தன்னுடைய வழக்கத்தை மாற்றி கொள்ளவில்லை. அதுமட்டுமில்லை, கமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும், மற்ற படங்களில் நடிப்பது என எல்லாமே தன்னுடைய கட்சியின் செலவுக்காகத்தானாம்.
பிரச்சாரம்
இப்போது, கமலுக்கு இன்னொரு பிளஸ்ஸும் சேர்ந்துள்ளது.. எந்த அரசியல் கட்சிக்குமே பிரச்சாரம் செய்ய, கூட்டம் போட, தற்போது தமிழகத்தில் தடை போடப்பட்டுள்ளது.. இதனால் திமுக கூடாரமே தடுமாறி உள்ளது.. இப்படிப்பட்ட கொரோனானா சமயத்திலும், டிவி ஷோவை அரசியல் மேடையாக்கும் வாய்ப்பு கமலுக்கு கிடைத்துள்ளது... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. அதனால் கமல் எது பேசினாலும், அப்படியே மக்கள் மனசில் பச்செக்கென ஒட்டிக் கொள்ள நிறைய வாய்ப்பு உள்ளது.
மறைமுக அரசியல்
அப்படித்தான் நேற்று ஓபனிங்கிலேயே தன்னுடைய மறைமுக அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தார் கமல்.. பிக்பாஸ் வீட்டை சுற்றி பார்த்தார்.. "கிச்சனில் ஸ்டவ்வில் 4 பர்னர்கள் இருக்கின்றன... ஆனாலும் 2 மட்டுமே எரியும்.. போட்டியாளர்கள் வயிறும் கொஞ்சம் எரியும்" என்று நக்கலாக சொன்னது முதல் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களின் பின்னாலும், பொடி வைத்து பேசி கொண்டே வந்தார்.
கவுரவம்
கொரோனா காலத்தில், கள பணியாளர்களாக இருக்கும் நபர்களை இந்த ஷோவில் நேரடியாக அழைத்து கவுரவித்தார் கமல்.. தொற்று பாதித்து, உயிரிழந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி, டாக்டர்கள், நர்ஸ், சமூக சேவகர், துப்புரவு தொழிலாளர் என பலரிடமும் கமல் வீடியோ மூலம் பேசி கையெடுத்து அவர்களுக்கு நன்றி சொன்னதை, தமிழக மக்கள் உற்று கவனிக்காமல் இல்லை.
எதிர்ப்பு
இந்த நிகழ்ச்சி துவங்ககூடாது என்று வழக்கம்போல இந்த முறையும் எதிர்ப்பும் கிளம்பியது.. அதேமாதிரி கடந்த முறை சீசனில் நடந்த சில சம்பவங்கள் கமலுக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை.. அதனால், இந்த முறை அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் கமல் கவனமாக இருக்கிறாராம்.
அனுமதி
அதனால்தான், சர்ச்சைகளை உண்டாக்குபவர்களையோ, அதாவது, கோர்ட், கேஸ் எதிர்கொள்பவர்களையோ அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தியபடி இருந்தாராம்.. காரணம், அப்படி ஏதாவது ஒரு சிக்கல் வந்துவிட்டால், அதை வரப்போகும் தேர்தலில் ஒரு தடையாக ஊதி பெரிதாக்கிவிடுவதால், இப்படி முன்னெச்சரிக்கையுடன் தெரிவித்ததாக சொல்கிறார்கள்.
வேற லெவல்
எப்படி பார்த்தாலும், இன்னும் இந்த 100 நாளில், தன்னுடைய கருத்துக்களை கமல் ஆணித்தரமாக எடுத்து வைத்தாலும் அதை யாராலும் தடுக்க முடியாது.. மக்களுக்கான, மாற்றத்துக்கான வலிய விஷயத்தை சொன்னாலும், அதையும் யாராலும் தடுக்க முடியாது.. அதனால் எப்படி பார்த்தாலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது கமலின் அரசியலின் அடுத்த லெவல் என்றே சொல்ல முடியும்!