'இது ரூ 15 லட்சமாம்.. காண்டிராக்டர் சொந்த செலவில் புது கட்டிடத்தை கட்டி தரட்டும்..' கமல் சாட்டையடி
சென்னை: புளியந்தோப்பு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் மிகவும் பலவீனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிய கட்டிடத்தை கட்ட வைக்க வேண்டும் என்று கமல் வலியுறுத்தியுள்ளார்
குடிசைகளற்ற தமிழ்நாட்டை அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் கடந்த 1970ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்.
புதிய கட்டிடங்களைக் கட்டி குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதுதான் இந்த குடிசை மாற்று வாரியத்தின் பணி.
|
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
தமிழ்நாடு முழுவதும் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்குக் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோரை குடிசை பகுதிகளில் இருந்து வெளியேற்ற முடிந்துள்ளது. ஆனால், அதேநேரம் குடிசை மாற்று வாரியத்தின் வீடுகளின் தரம் குற்றச்சாட்டுகளும் உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. குடிசை மாற்று வாரியத்தின் வீடுகள் மோசமான தரத்தில் உள்ளதாகவும் சில நேரங்களில் அடிப்படை விதிகள் கூட பின்பற்றப்படுவதில்லை என்றும் புகார்கள் உள்ளன.

சென்னை புளியந்தோப்பு கட்டிடம்
அப்படியொரு புகார் தான் சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடத்தில் எழுந்துள்ளது. இந்த கட்டிடத்தின் சுவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளது. லேசாகத் தொட்டாலே வெளிப்புற சுவரின் பூச்சு அப்படியே பெயர்ந்து விழுகிறது. உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இந்தக் கட்டிடத்தின் தரத்தைப் பார்த்தால் எதோ பழமையான கட்டிடம் போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில், இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலாகும்.

மிக மிக மோசம்
சென்னை புளியந்தோப்பு கேசவபிள்ளை பூங்கா பகுதியில் அதிமுக ஆட்சியில் 2018 முதல் 2021 வரை இரண்டு கட்டங்களாக இதன் கட்டுமானப் பணிகள் நடந்துள்ளது. சுமார் 250 கோடி ரூபாய் செலவில் 1900 வீடுகள் கட்டப்பட்டது. கட்டப்பட்டு சில ஆண்டுகளிலேயே மிக மோசமான நிலைக்கு இந்த கட்டிடம் சென்றுள்ள நிலையில், இது பற்றிய செய்திகளைப் பல சேனல்களும் இன்று வெளியிட்டிருந்தது.

கமல் சாடல்
இந்நிலையில், இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தனது ட்விட்டரில், "புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு. இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

என்ன காரணம்
கட்டிடத்தின் தரம் மோசமாக உள்ளதால் ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் எனக் கமல் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், புளியந்தோப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டு அரசுக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் பீரோ, கட்டில் போன்ற பொருட்களை எடுத்துச் சென்ற போது தான் கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் ஒப்பந்ததாரர் விளக்கமளித்துள்ளார். இதற்கிடையே எழும்பூர் திமுக எம்எல்ஏ பரந்தாமன் அந்த கட்டிடத்தில் இன்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications