குடிநீர் இல்லை; சாலைகள் சரியில்லை.. திராவிட கழகங்கள் இதுவரை என்னதான் செய்தன? வறுத்தெடுத்த கமல்!
சென்னை: தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் குடிநீர் முதல் சாலை வசதிகள் வரை அனைத்தும் இல்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.
வாக்குகளை பிரிக்கும் கட்சிகள்
மக்களிடம் இருந்து வாக்குகளை பெறுவதற்காக பம்பரமாக சுழன்று வருகின்றனர். இந்த தேர்தலில் திமுக-அதிமுக இடையேதான் நேரடி போட்டி என்ற போதிலும், இதைத் தவிர சில கட்சிகளும் வாக்குகளை பிரிக்கும் அளவுக்கு திராவிட கட்சிகளை அச்சுறுத்தி வருகின்றன.
மக்கள் நீதி மய்யம் மீது நம்பிக்கை
இந்த வரிசையில் இருப்பதுதான் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை தன்னுடன் கூட்டணியில் வைத்துள்ள மக்கள் நீதி மய்யம், விஜயகாந்தின் தேமுதிகவை கூட்டணியில் இணைப்பதில் தோல்வி அடைந்து விட்டது. இதுவரை வெளிவந்த பல்வேறு கருத்து கணிப்புகளும் திமுக, அதிமுக இடையே போட்டி இருக்கும் என்று கூறி இருக்கும் நிலையில், இந்த கட்சிகளுக்கு அடுத்ததாக ஒரு சேர கை நீட்டி காண்பித்து இருப்பது மக்கள் நீதி மய்யம்தான்.
ஊழலை கையிலெடுத்த கமல்
பல்வேறு நகரங்களில் குறிப்பாக சென்னையில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது என்று கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டின. ஆளும் கட்சியையும், ஆண்ட கட்சியையும் பாகுபாடு இல்லாமல் மேடைக்கு, மேடை கமல்ஹாசன் வறுத்து எடுத்து வருகிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினையும் சரமாரியாக தாக்கி வருகிறார். குறிப்பாக மக்களை கவரும் வகையில் ஊழலை கையிலெடுத்துள்ள கமல்ஹாசன், அரசில் நடக்கும் ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.
|
திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த நம்மவர்
இந்த நிலையில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் குடிநீர் முதல் சாலை வசதிகள் வரை அனைத்தும் இல்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:- தமிழகமெங்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள்தான். குடிநீர் இல்லை, பாதாள சாக்கடை பிரச்சனை, குப்பை அள்ளுவதில்லை, நீர்நிலைகள் மாசுபாடு, சாலைகள் மோசம், சுகாதார நிலையங்கள் இல்லை. அரை நூற்றாண்டாகியும் இவற்றைக் கூட சரி செய்யாதவர்கள்,இனி எப்போது செய்வார்கள்? என்று கூறியுள்ளார்.