காமராஜர் பிறந்தநாள்.. சனிக்கிழமை நோ லீவு.. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு
சென்னை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழு நேரமும் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் மாணவர்கள் புத்தாடை அணிந்து, விழா எடுத்து காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமை ஜூலை 15ஆம் தேதி அனைத்து விதமான பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாகக் கொண்டாடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலைநாளாக இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முழுவேலைநாளாக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் உத்தரவிட்டுள்ளது.

போட்டிகளை பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும் , பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்களைப் பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியிலிருந்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications