நோய் நீக்கும் கந்த சஷ்டி கவசம் - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நடத்திய நிகழ்ச்சியில் 2 கோடி பேர் பங்கேற்பு
வாழும் கலை அமைப்பு சார்பில் ஆன்லைனில் நடைபெற்ற கந்த சஷ்டி கவசம் பாராயண நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்தும் 2 கோடி பேர் பங்கேற்றனர்.
சென்னை: நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நோய் நொடியின்றி காக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடப்படுவதே கந்த சஷ்டி கவசம். ஐப்பசி மாதம் ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்தனை நினைத்து கவசம் பாடுவார்கள். இப்போது கந்த சஷ்டி கவசத்திற்கு எதிராக பரப்பப்பட்ட அவதூறு உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் எழுச்சியடைய வைத்துள்ளது. கந்தனின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நடத்திய ஆன்லைன் கந்த சஷ்டி கவசம் பாராயண நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் முருக பக்தர்களும் பங்கேற்று கவச பாராயணம் செய்தனர். 2 கோடி பேர் பங்கேற்றதாக தெரியவந்துள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டது, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கறுப்பர் கூட்டம் சேனல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதுடன், கந்த சஷ்டி கவசத்தின் பெருமைகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிப்படுத்த தொடங்கினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்வதும் அதிகரித்துள்ளது. பல கோவில்களிலும் வீடு வீடாகவும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்கின்றனர்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக என்று சொல்வார்கள். அதுபோல கந்த சஷ்டி கவசத்தை 2 கோடி பேர் ஒரே நாளில் பாராயணம் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். வாழும் கலை அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து ஞாயிறன்று மாலை கந்த சஷ்டி கவசம் பாராயணத்தை தொடக்கி வைத்தார் ரவிசங்கர். அப்போது அவர் மோரை கடைந்தால் அதில் மறைந்துள்ள வெண்ணெய் கிடைக்கும். அதுபோல கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தால் அன்பும், தைரியமும் வெளிப்படும் என்று சொன்னார். நமது ஒவ்வொரு அங்கத்தையும் காக்க வேண்டும் என்று பாடப்படுவதே கந்தர் சஷ்டி கவசம். மனிதன் நோயின்றி வாழ பாடப்படுவதே சஷ்டி கவசம். முருகப்பெருமானை ஞான சக்தியாகவும், வள்ளி இச்சாசக்தி, தேவயானை கிரியா சக்தியாகவும் வணங்கப்படுகிறார். இந்த பாராயணம் மூலம், நாட்டிற்கு வந்துள்ள நோய் விலகவும், மனிதர்கள் வளமாகவும், சந்தோஷமாகவும் வாழ பிரார்த்திப்போம் என்று கூறினார் ரவிசங்கர்.
இந்த பாராயண நிகழ்ச்சியில் இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தமிழ் மொழி பேசும் மக்கள் 2 கோடி பேர் இதில் பங்கேற்றனர். உலகெங்கும் உள்ள மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், தமிழ் சங்கங்கள், முருகர் பக்தி பேரவைகள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரைக் குழுக்கள், இந்து அமைப்புகள், கிராமப் பூசாரிகள் பேரவை, துறவியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கந்த சஷ்டி கவசம் மகா பாராயணத்தில் பங்கேற்றனர்.
இந்த மெகா பாராயணத்தில் அதிக அளவிலான மக்களை பங்கேற்க செய்வதற்காகவும், மக்களிடையே கந்த சஷ்டி கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் டுவிட்டரில் #WorldCelebratesMurugan #வேலும்மயிலும்துணை என்ற ஹேஷ்டேக்குகள் இணைக்கப்பட்டன. இந்தநிகழ்ச்சி சமூக வலைதளங்கள், பக்தி சேனல்கள், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பானது.