"கரகரத்த குரலில் கொஞ்சும் அப்பாவை தேடுகிறேன்".. நா தழுதழுத்து கருணாநிதியை நினைவுகூர்ந்த கனிமொழி!
சென்னை: கரகரத்த குரலில் கொஞ்சும் அப்பாவை தேடுகிறேன் என உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கனிமொழி எம்பி உருக்கமாக தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற, முதல்வர் ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் தனது தந்தை கருணாநிதியை நினைவுக்கூர்ந்து பேசினார். இதனால் அங்கு உருக்கமான சூழல் நிலவியது.

ஆயிரம் ஆயிரம் கண்கள்
கனிமொழி பேசுகையில், "ஆயிரமாயிரம் கண்கள் இருக்கும் இந்த அரங்கில் இதையெல்லாம் பார்த்து பெரிதுவக்கும் இரண்டு கண்களைத் தேடுகிறேன். உங்களை வாரியணைத்து உச்சி முகர்ந்து "வாழ்க உன் பணி ஸ்டாலின்" என்று கரகரத்த குரலில் கொஞ்சும் அப்பாவைத் தேடுகிறேன்!"

உடன்பிறப்புகள்
அவர் இல்லை. ஆனால் இங்கு இருக்கும் அவரது உடன்பிறப்புகள் அனைவரது முகத்தில் வரும் பெருமையிலும் பூரிப்பிலும் பொங்கி வழிகிறது அப்பாவின் அன்பு என குரல் தழு தழுக்க கூறினார் கனிமொழி. சில மணி துளிகளுக்கு அந்த இடமே உருக்கமான சூழலில் கிடந்தது.

கனிமொழி மீது பாசம்
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடைக்குட்டியான கனிமொழி மீது அளவுக்கடந்த பாசம். 2 ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறைக்கு சென்ற போது கருணாநிதி மனதளவில் மிகவும் உடைந்து போய்விட்டார். பின்னர் அந்த வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை என கூறி 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறை நடைமுறை
அப்போது கனிமொழி டெல்லியில் உள்ள சிறை நடைமுறைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதற்கு கருணாநிதி அடைந்த மகிழ்ச்சியை அவருடன் இருந்தவர்கள் இன்றும் நினைத்து பார்க்கிறார்கள். பின்னர் கனிமொழி சிஐடி காலனிக்கு வந்தவுடன் கருணாநிதியிடம் போய் "அப்பா நான் வந்துவிட்டேன்" என கூறியதும் கருணாநிதியின் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி!

பிஸியிலும் குழந்தைகள் மீது பாசம்
எம்எல்ஏவாக, அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக முதல்வராக, கட்சி தலைவராக இருந்த போது மக்களுக்கு எவ்வித சமரசம் இல்லாத மக்கள் சேவையை கருணாநிதி ஆற்றினாரோ அதே போல் பிள்ளைகளிடமும் பிஸியான நேரத்திலும் கருணாநிதி நேரம் செலவிட்டதையெல்லாம் கனிமொழி ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்திருந்தார். இன்றும் தனது சிஐடி காலனி வீட்டில் கருணாநிதி எப்போதும் விரும்பி அமரும் நாற்காலியில் கருணாநிதியின் புகைப்படத்தை வைத்துள்ளார். அப்பா இழப்பை நினைத்து தனது மனம் சோகமாக இருக்கும் போது "நாற்காலியில் இருக்கும் அப்பாவிடம்" போய் கொட்டி ஆறுதல் பெறுவார். அது போல் மகிழ்ச்சியான தருணங்களிலும் அதை "தந்தையிடம்" பகிருவார்.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்
கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த விஷயம் ராஜாஜி அரங்கில் இருந்த ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தெரிந்தவுடன் ஸ்டாலின் கண்களில் கண்ணீர் வந்து மகிழ்ச்சி பெருக்கில் உடைந்து அழுதுவிட்டார். அப்போது அவரை கனிமொழியும் உடனிருந்தவர்களும் தேற்றினர்.












Click it and Unblock the Notifications