"மாத்தி யோசி".. பாஜக, காங்.தானா.. திமுக, அதிமுக இப்படி ஒரு முடிவெடுத்தா என்னாகும்.. கலகலக்கும் குமரி
குமரியில் அதிமுக, திமுக போட்டியிட்டால் எப்படி இருக்கும் என தொண்டர்கள் யோசிக்கிறார்கள்
சென்னை: "அது ஏன் குமரி என்றாலே பாஜகவும், காங்கிரசும்தானா.. அதிமுக, திமுக எல்லாம் கட்சியாக தெரியவில்லையா.. இந்த முறை கூட்டணிகளை கழட்டிவிட்டுவிட்டு, இவங்களே அங்கு போட்டியிட்டால் நல்லா இருக்குமே" என்ற கருத்து பரவலாக எழுந்து வருகிறது.
கன்னியாகுமரியை பொறுத்தவரை பாஜகவின் கோட்டை.. பாஜகவின் மண்.. இது எல்லாவற்றையும்விட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதே தொகுதிதான்.. இதில், வசந்தகுமார் போட்டியிடவும், ஸ்டார் அந்தஸ்தை இந்த தொகுதி பெற்றுவிட்டது.
இப்போது வசந்தகுமாருக்கு பதிலாக யார் அடுத்த வேட்பாளர் என்ற பேச்சு எழுந்துள்ளது. அவரது மகன், விஜய் வசந்தகுமார் பெயர் அடிபட்டு வருகிறது. இவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லைதான்.. ஆனாலும், அனுதாப ஓட்டுக்களை இவரை வைத்துதான் பெற முடியும் என்று அக்கட்சி தலைமை யோசிக்கிறது. இதே காங்கிரஸ் கட்சியில் மேலும் சிலர் எம்பி பதவிக்கு ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
பொன்.ராதா
பாஜக பக்காவாக களம் இறங்கத் தயாராகி வருகிறது.. குறிப்பாக பொன். ராதாகிருஷ்ணன் தரப்பு இழந்த மறுபக்கம் பெருமையை மீண்டும் தக்க வைக்க ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது.. மறுபடியும் அவரே போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. பொன்.ராதாவை பொறுத்தவரையில் மக்களுக்கு நேரடி கோபம் முன்பிருந்தே அவர் மீது உள்ளது. குளச்சல் துறைமுகம் சமாச்சாரம் அப்படியே கிடப்பில் உள்ளதே அதற்கு காரணம்.
கன்னியாகுமரி
ஒருவேளை வேறு ஒருவரை வேட்பாளராக அங்கு பாஜக நிறுத்தினாலும், மத்திய அரசின் தற்போதைய செயல்பாடுகள் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி வருவது பெரிய மைனசாக அமையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால், இந்த தொகுதியை பொறுத்தவரை வேறு சில தகவல்களும் கசிந்து வருகின்றன.. கன்னியாகுமரி என்றாலே ஒன்று பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிகள்தானா? வேறு கட்சிகளுக்கு அங்கு வாய்ப்பு இல்லாமலா போகும்? ஏன் திமுக, அல்லது அதிமுக அந்த தொகுதியை இந்த முறை கைப்பற்றக்கூடாது என்பதே அது!
திமுக - காங்கிரஸ்
இதற்கு 2 காரணங்களும் உள்ளன.. முதலாவதாக கட்சி சார்ந்தது.. திமுகவில் காங்கிரஸ் கட்சி உள்ளது.. அதிமுகவில் பாஜக உள்ளது.. திமுகவுக்கும் - காங்கிரசுக்கும் அளவுக்கு அதிகமான இணக்கமான போக்கு இல்லை.. அதிருப்திகள் நிறைய உள்ளன.. இதற்கு கேஎஸ் அழகிரியின் பல பேட்டிகள், சர்ச்சை கருத்துக்களே சாட்சி!
போட்டி
அதுமட்டுமில்லை.. திமுகவை வைத்துதான் காங்கிரசுக்கு ஆதாயம் இருக்கிறதே தவிர, காங்கிரஸால் திமுகவுக்கு போதுமான பலன் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.. அதனால், தாமே கன்னியாகுமரியில் போட்டியிட்டால் என்ன? என்பதே தற்போதைய யோசனை.. பலம்பொருந்தி வரும் அதிமுகவை சமாளிக்கவும், இந்த முறை எப்படியாவது பதவியை பிடித்து விட வேண்டும் என்றால், எதற்காக ஒரு தொகுதியை விடவேண்டும் என்பதே எண்ணம்!
அதிமுக - பாஜக
இதேதான் அதிமுகவுக்கும்.. பாஜகவுடன் சரியான உடன்பாடு இல்லை.. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் போதுமான அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை என்ற வருத்தம் இன்னமும் அதிமுகவுக்கு உள்ளது.. வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா, இல்லையா என்ற சந்தேகமும் உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், திமுகவின் வளர்ச்சியை தடுக்கவும், அதிமுக ஆட்சியையே தொடரவும், தாங்களே ஏன் கன்னியாகுமரியில் போட்டியிட கூடாது என்று அதிமுக தரப்பும் யோசிக்கிறதாம்.
சிறுபான்மையினர் ஓட்டுக்கள்
இரண்டாவது காரணம், இந்த தொகுதியை பொறுத்தவரை பெரும்பாலும் ஆர்.சி. கிறிஸ்தவ மக்கள்தான் அதிகம்.. போட்டியிடும் வேட்பாளர்கள் இந்துக்களாக இருந்தாலும், நாடார்களாக இருந்தாலும், சிறுபான்மை ஓட்டுகள் யாருக்கு அதிகம் விழுகிறதோ அதை வைத்துதான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.. அந்த வகையில், சிறுபான்மை ஓட்டுக்களை அள்ளுபவர் யாரோ, வசந்தகுமார் போல சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு மக்களிடம் நெருங்கி இருப்பவர் யாரோ, அவர்களே வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்ற யோசனையும் உள்ளதாம்.
புதிய அத்தியாயம்
அதனால், காலங்காலமாக கன்னியாகுமரி வரலாற்றில் பாஜக, காங்கிரஸ்தான் என்பதை மாற்றி எழுதுவதற்காக திமுகவும், அதிமுகவும் இந்த முறை முயற்சி எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.