மேகதாது குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார்.. தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்
சென்னை: மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்குமாறு தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு ரூ. 5600 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய நீர் வள ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

அந்த ஆணையமும் மேகதாதுவில் ஆய்வு செய்யுமாறு கர்நாடக அரசுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. இதை தமிழக அரசு வன்மையாக கண்டித்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது.
மேகதாதுவுக்கு மத்திய அரசு ஒப்புதலை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டமும் நிகழ்ந்துள்ளது.
இதில் நீர் வளத் துறை அமைச்சர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் மேகதாது அணை குறித்து விளக்கமளிக்க பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் எந்த வித பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாராக இல்லை என தமிழக அமைச்சர் சிவி சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications