அப்போலோ மருத்துவமனையில் கார்த்தி சிதம்பரத்திற்கு அறுவை சிகிச்சை சக்சஸ்! என்ன பிரச்சனை?
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு, வயிற்றில் சிறியளவிலான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாப்பாட்டில் சமரசமில்லை: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அசைவ உணவுகளை வெளுத்துக்கட்டும் பழக்கம் உடைய இவர் வாரத்தில் குறைந்தது 6 நாட்களாவது அசைவம் சாப்பிடக்கூடியவர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் சமரசமே செய்யாத அவர், தனக்கு காய்ச்சலோ உடல் வலியோ ஏற்பட்டால் நண்டு சூப்பும், கோழி ரசமும் சாப்பிட்டு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமலேயே சரி செய்யக் கூடியவர்.

வயிறு குடல் பிரச்சனை: இந்நிலையில் தான் வயிறு குடல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த கார்த்தி சிதம்பரம் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் சந்தோஷ் ஆனந்த் தலைமையிலான மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே சிகிச்சையின் ஒரு பகுதியாக மயக்க மருந்து செலுத்தப்பட்டு இன்று மைனர் சர்ஜரியும் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே இது குறித்து அறிக்கை விடுத்துள்ள அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், கார்த்தி சிதம்பரம் குணம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளது.
ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்: அட்வான்ஸ் டெக்னாலஜியில் சிறியளவில் துளையிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை என்பதால் கார்த்தி சிதம்பரம் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது. எனினும் அவர் ஓரிரு வாரங்கள் ஓய்வெடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான ரேஸில் கார்த்தி சிதம்பரமும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதரவாளர்கள் யாரும் அப்போலோ மருத்துவமனைக்கு வர வேண்டாம் எனவும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மீண்டும் சிவகங்கையில் களம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம், அதற்கான அடித்தளப் பணிகளை தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications